
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைக்கும் நோக்கத்துடன் முன்னாள் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பும், அவரை எதிர்த்து, அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகி சரித்திரம் படைப்பதை நோக்கமாக கொண்டு தற்போதைய துணை ஜனாதிபதியும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார்.
அனைத்து கருத்துக்கணிப்புகளும் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கணித்துள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மதுரை மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வம் கோயிலான தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. துளசேந்திரபுரம் கிராமம் ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலனின் பிறந்த ஊராகும்.
கோயிலுக்கு வெளியே கிராம மக்கள் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பெரிய பேனர் வைத்து அதில் மண்ணின் மகள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பெருமையாக அமையும் என்றும் தெரிவித்தனர்.