ஜெய் பஜ்ரங் பலி – இந்திய ராணுவத்தின் முழக்கமா?

ஜெய் பஜ்ரங் பலி
இந்தியா ராணுவத்தின் முழக்கமா?
ஜெய் பஜ்ரங் பலி என்ற வார்த்தையை அமரன் படத்தில் வீரர்கள் முழங்கும் காட்சி சந்தேகங்களை ஏற்படுத்தியது. இப்படி ஒரு முழக்கம் இந்திய ராணுவத்தில் இருக்கிறதா என தேடியபோது, அதற்கான விளக்கம் கிடைத்தது.
இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்ட், அதாவது படைப்பிரிவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட முழக்கங்கள் உள்ளன.
மெட்ராஸ் படைப்பிரிவின் முழக்கம் அதாவது war cry – வீர மத்ராசி அடி கொல்லு, அடி கொல்லு…
ராஜ்புத்னா ரைபிள்ஸ் முழக்கம் – ராஜா ராமச்சந்திராகி ஜெய்…
ராஜ்புட் ரெஜிமென்ட் முழக்கம் – போலோ பஜ்ரங் பலிக்கே ஜெய்…
எனவே திரைப்படத்தில் அந்த முழக்கத்தை பயன்படுத்தி இருப்பதை பார்க்க முடிகிறது.
சுமார் 21 ரெஜிமென்டுகள் உள்ளன. ஒவ்வொரு ரெஜிமென்டும் அந்த பகுதிக்கான கடவுள்கள் மற்றும் மன்னர்கள், அல்லது பொதுவான முழக்கங்களை கொண்டுள்ளன. இதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய நம்பிக்கை சார்ந்த முழக்கங்கள் இருந்தால், மேலும் ராணுவத்தை அது வலிமைப்படுத்தி, அந்த சமூக மக்களை அதிகம் ஈர்க்கும்.
அடுத்ததாக பஜ்ரங் பலிக்கே ஜெய் என்ற வார்த்தையை கடந்த ஆண்டு, பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ராணுவ ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
பஜ்ரங் பலி என்ற முழக்கம் முன்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், அதனை அமரன் திரைப்படத்தில் பயன்படுத்தியதால் கேள்விகள் எழுந்தன.
ஜெய் பஜ்ரங் பலி என்றால், சுருக்கமாக அனுமன் கடவுளுக்கு வெற்றி என்று அர்த்தம். இந்த முழக்கத்தை இந்து பக்தர்கள், எழுப்புவது அவர்களது உரிமை. பக்தி அடிப்படையில் சேறும். ஆனால் இந்த மக்களின் நம்பிக்கைகளை தங்களது அரசியல் நலனுக்காக பயன்படுத்த நினைக்கும் கும்பல்கள், இந்த வார்த்தைகளை தங்களது கலவர நோக்கத்திற்கு பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
கடைசியாக நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்த வார்த்தையை பாஜகவினர் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைய முயன்றனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தனர். அதாவது பாஜகவின் துணை அமைப்பான பஜ்ரங்தள் என்ற அமைப்பு தொடர்ந்து, கலவரங்களில் ஈடுபட்டு வருவதால், அந்த அமைப்பு தடை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.
இதனை அரசியலுக்கு பயன்படுத்த நினைத்த பாஜக, பஜ்ரங் என்றால் அனுமனை குறிக்கும் சொல், எனவே பஜ்ரங்தளத்தை தடை செய்வது, அனுமனை எதிர்க்கும் செயல் என்று புதிரான, விநோத விளக்கத்தை கொடுத்ததோடு, ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தை தேர்தலில் முன்வைக்கத் தொடங்கினர்.
இது காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், தேர்தலில் மக்கள் காங்கிரசையே தேர்வு செய்தனர். இதனையடுத்து காங்கிரசின் வெற்றிக் கொண்டாட்டத்தில், அனுமன் வேஷம் போட்டு, தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
==========