தமிழ்நாடு

விஐடி பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற மனதை உலுக்கும் சம்பவம்!

காட்பாடியில் நடைபெற்ற இந்தச் துயரச் சம்பவம் இளகிய மனம் படைத்தவர்களை உலுக்கிவிடும். எனவே இதயம் பலவீனமானவர்கள் இந்த செய்தியை பார்க்க வேண்டாம்.காட்பாடி அருகே ரயிலில் இருந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து, சுய நினைவின்றி, தண்டவாளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இந்தக் காட்சியை அருகே இருந்த விஐடி கல்லூரியின் விடுதி பால்கனியில் இருந்து மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக அவர் ஹாஸ்டல் வார்டன் மற்றும் நிர்வாகிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார்.அந்த கல்லூரியில் 3 ஆம்புலன்ஸ்களும், 24 மணி நேரம் செயல்படக் கூடிய ஆரம்ப நிலை மருத்துவமனையும் உள்ளது. அப்படி இருந்தும், கல்லூரி நிர்வாகிகள் அந்த மாணவனை காக்க முன்வரவில்லை என தெரிகிறது.தொடர்ந்து 45 நிமிடங்கள் அந்த மாணவன் வலியால் துடித்த நிலையிலும் யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மாணவன் மீது ஏறியுள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

மாணவன் ரயிலில் இருந்து விழும் போது, உள்ளே இருந்து அதனை பார்த்த, சக பயணி ஒருவர், 4.11 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில்வே காவலர்களிடம் மாணவன் தவறி விழுந்து விட்டதாகவும், அவனது Bagகையும் கொடுத்துள்ளார். ரயில்வே காவல்துறையினர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, மாணவன் விழுந்த இடத்தை 4.45 மணி அளவில் அடைந்துள்ளனர். அதற்கு முன்பாகவே அவன் மீது சரக்கு ரயில் ஏறியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவம் குறித்து விஐடி மாணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார். தான் 2ஆம் ஆண்டு மாணவன் என்றும், எம். பிளாக் ஹாஸ்டலில் தங்கி இருந்ததாகவும் அப்போது, சரியாக மாலை 4 மணியளவில் ஓடும் ரயிலில் இருந்து ஒரு இளைஞர் விழுந்ததை தனது நண்பர் பார்த்து, தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்தச் செய்தி பல மாணவர்களுக்கும் சென்ற நிலையில், அந்த இளைஞன் உயிரிழந்து விட்டதாக அவர்கள் ஆரம்பத்தில் நினைத்ததாகவும், பின்னர், உடலில் அசைவுகள் இருப்பதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞன் எழுந்திருக்க முயற்சித்த நிலையில், முடியாமல் அங்கேயே மீண்டும் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ஹாஸ்டல் வார்டன்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கூறியபோது, அந்த இளைஞன் விஐடி கல்லூரியைச் சேர்ந்தவரா என முதல் கேள்வியை எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

தங்களது கல்லூரியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்றும், இல்லாவிட்டால், வெளியே சென்று, உதவி செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் கூறியதாக அந்த மாணவர் பதிவிட்டுள்ளார்.
தங்களுக்கு தமிழ் மொழி தெரியாது என்பதால், காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி தெளிவாக பேச முடியாது என்றும், எனவே அவர்களிடம் புகார் தெரிவியுங்கள் என மாணவர்கள் கேட்டபோது, அதற்கும் வார்டன்கள் மற்றும் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், குறைந்த பட்சம் அந்த இளைஞனை தண்டவாளத்தில் இருந்து இழுத்து, பாதுகாப்பான பகுதியில் போட்டு விடலாம், வாருங்கள் என கூப்பிட்ட போதும், அதற்கும் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து விட்டதாக அந்த மாணவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.இப்படியே சுமார் 45 நிமிடங்கள் சென்ற நிலையில், திடீரென அதிவேகத்தில் வந்த சரக்கு ரயில், அந்த மாணவர் மீது மோதியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகிகள், வார்டன்களின் பொறுப்பற்ற தன்மையால் தங்களது கண் முன் ஒரு உயிர் பறிபோனதை எண்ணி மாணவர்கள் துவண்டுபோய் உள்ளனர்.

அதே நேரம் இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், மாணவர்களை அணுகியபோது, மாணவர்கள் தரப்பில் இருந்து, யாரும் பேட்டியளிக்க முன்வரவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிரட்டப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பல்கலைக்கழக தரப்பினர், தாங்களும், ரயில்வே போலீசாரிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் பயணி ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே அந்த இடத்திற்கு தாங்கள் சென்றதாகவும், கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என ரயில்வே போலீசார் கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.உயிரிழந்த மாணவன் ஹஸ்வந்த் திருவள்ளூர் மாவட்டம் கக்கலூரைச் சேர்ந்தவர். சென்னை – மைசூர் விரைவு ரயிலில் திருவள்ளூரில் ஏறியுள்ளார். NTTF எனப்படும் Nettur Technical Training Foundation நிறுவனத்தில் படித்து வந்துள்ளார்.மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூலி ஆட்களாக அனுப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுவதும், மனிதம் பற்றிய அடிப்படை அறிவைக் கூட மாணவர்களுக்கு அவர்கள் போதிப்பதில்லை என்பதும், அவர்களுக்கு அதுபற்றிய அறிவு இல்லை என்பதும் இந்தச் சம்பவம் மூலம் உறுதியாகியுள்ளது.விஐடி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற அழுத்தங்களும் எழுந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button