அடுத்த கட்டம்!

ஞாயிறு இரவு முதல் திங்கள் அதிகாலை வரை வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள கைஃபா நகரத்தில் ஹிஸ்புல்லா நடத்திய சரமாரியான ஏவுகணை தாக்குதலில் பலருக்கு காயம் ஏற்பட்டு ஹைஃபா ரெம்பம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹைஃபா பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் ஒன்றைக் கூட இஸ்ரேலின் அயன் டோம்களால் தடுக்க முடியவில்லை என கூறிப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா தரப்பு கூறுகையில் FADI -1 என்ற ஏவுகணை தொகுப்புகளை கைஃபா பகுதியில் உள்ள கேரமல் பேஸ் ராணுவ தளத்தை நோக்கி ஏவியதாக கூறியுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று தெற்கு லெபனானில் உள்ள யாரோன் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை நுழைய முயற்சித்ததாகவும் தங்களது கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை திருப்பி அனுப்பப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறி இருக்கிறது. இந்தப் பகுதியை நீண்ட நாட்களாகவே இஸ்ரேல் கைப்பற்ற நினைப்பதாகவும், ஆனால் அதன் பூலோக அமைப்பு இஸ்ரேல் ராணுவத்தினருக்கு பலகீனமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் களத் சுகைப் பகுதியிலும் பீரங்கி குண்டுகளை ஏவி லெபனான் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை நுழைய முயற்சித்து இருக்கிறது. அங்கும் கடுமையான பதில் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தி வருகிறது.
இதற்கு முன்பும் இதே பகுதியில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை நுழைய முயற்சித்து கடுமையான உயிரிழப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை வடக்கு இஸ்ரேலில் உள்ள அல்ஜலில் எனப்படும் கலிலி பகுதியில் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக லெபனான் கடுமையான பதுங்குகுழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் லெபனானுக்குள் நுழைய முடியாமல் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை திணறி வருகிறது.