நடந்தது என்ன?

மீண்டும் ஒரு முறை மாபெரும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் லெபனானின் பல நகரங்களை குறிவைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இதில் பெய்ரூட்டின் புறநகர் பகுதியான தெகியா என்ற நகர் மீது ஏராளமான ஆக்கிரமிப்பு விமானங்கள் பல மணிநேரமாக தொடர்ந்து குண்டு வீசியுள்ளன.
இதில் 7 அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 10 ஆயிரம் கிலோவிற்கு மேல் ராட்சத வெடிகுண்டுகளை ஆக்கிரமிப்பு பயன்படுத்தியுள்ளது.அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கீழ் உள்ள சுரங்கத்தில் தான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவும், முக்கிய தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் தாக்குதலில் நஸ்ருல்லாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அந்த பகுதியில் ஹிஸ்புல்லாவின் எந்த அலுவலகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
ஈரானும் நஸ்ருல்லா உயிருடன் இருப்பதாகவும், விரைவில் முழுத் தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. அதே நேரம் ஹிஸ்புல்லா சனிக்கிழமையும் தனது வழக்கமான தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. டெல் அவிவில் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
எனினும் அவை ராக்கெட்டுகளை இடைமறித்ததால் ஏற்பட்டவை என இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.முன்னதாக அமெரிக்காவிற்கு சென்ற ஆக்கிரமிப்பு பிரதமர் நெதன்யாகு, தனது பயணத்தை விரைவிலேயே முடித்துக் கொண்டு, இஸ்ரேலுக்கு நள்ளிரவு வந்துள்ளார்.
இனி வரும் நாட்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் மிக்கவையாக இருக்கும் என தெரிகிறது.