திங்கட்கிழமை அப்டேட்

லெபனான் மீது இஸ்ரேல் கடந்த சில நாட்களாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு இது பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. அதே நேரம் தனது தாக்குதல்களையும் அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது, புதிதாக Fadi-1, Fadi-2 ராக்கெட்டுகளை அந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது. இதில் Fadi-2 ராக்கெட்டானது, 170 கிலோ வெடி மருந்துகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 100 கிலோ மீட்டர் வரை பயணித்து இலக்கைத் தாக்கும். இந்த ராக்கெட் மூலம், இஸ்ரேலுக்குள் அதிக தூரம் ஊடுருவி புதிய தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது.
இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்பு ஊடகங்கள், தற்போது, 20 லட்சம் இஸ்ரேலியர்கள் வசிக்கும் நகரங்கள், ஹிஸ்புல்லாவின் தாக்குதல் எல்லைக்குள் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளன.ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், ஞாயிற்றுக்கிழமை 2 இஸ்ரேலிய படையினர் பலியானதாக லெபனான் ஊடகம் அல்மயாதீன் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை 2 இஸ்ரேலிய படையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியானதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் தெரிவித்தன.
எனவே கடந்த சில நாட்களில் மட்டும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் 4 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஒரு பொதுமக்கள் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா வெளியிட்ட தகவலில் இஸ்ரேலின் ரபேல் ஆயுத தொழிற்சாலை தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பால் பண்ணை ஒன்று முழுவதுமாக தகர்ந்துள்ளது.