பாரபட்சம் – தூய்மை தொழிலாளர்களுக்கு அநீதி!

கடல் அலைபோல் ஓயாத பக்தர்களை சந்தித்து வரும் கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். சாதாரண நாட்களில் 40 ஆயிரம் பக்தர்களும், சிறப்பு தினங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகை தருகின்றனர்.
8 மிகப்பெரிய டைனிங் ஹால்களில் நாள்தோறும் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
முடி காணிக்கை செய்ய வருபவர்களுக்கு இலவசமாக சேவை வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு 600 நாவிதர்கள் வேலை செய்கின்றனர். ஒரு பக்தருக்கு ஒரு பிளேடு பயன்படுத்தப்படுகிறது. நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் இலவசமாக மொட்டை அடித்துக்கொள்கின்றனர்.7000 அறைகள் கட்டி பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. உலகில் இந்த கோவிலின் பிரசாதத்திற்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.எவ்வளவு கூட்டம் வந்தாலும், கோவில் வளாகம் தூய்மையாக வைத்துக் கொள்ளப்படுகிறது. பெருமை கொள்வதற்கு பல விசயங்கள் இருந்தாலும், சில விசயங்கள் கடும் ஆட்சேபங்களை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்தக் கோவிலில் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 12 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்கள். ஆனால் நிரந்தர ஊழியர்களைப் போலவே இவர்களும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வேலை செய்து வருகின்றனர்.
லட்டு தயாரிப்பில் சாதி ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வைஸ்ணவ பிராமணர்கள் மட்டுமே லட்டை தொட்டு, உருட்டி, தயாரிக்கும் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். உதவியாளர்களாக வைஸ்ணவா அல்லாத பிராமணர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.இதற்கு முன்பு வைஸ்ணவா அல்லாத பிராமணர்களும், லட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஆந்திர அரசில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, 50க்கும் மேற்பட்ட வைஸ்ணவா அல்லாத பிராமணர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.420 பேர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லட்டுகளை தயாரிக்கின்றனர்.பெரிய லட்டு 750 கிராம் எடையிலும், சிறிய வகை லட்டுகள் 75 கிராம் எடையிலும் உள்ளன. தராசு பயன்படுத்தாமல், கைகளாலேயே இந்த எடைக்கு சரியாக அவர்கள் லட்டுகளை உருட்டுவதாக கூறப்படுகிறது.
இது அவர்களது தொழில்முறை அனுபவத்தை காட்டுகிறது.தற்போது 100 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதே வேலையைச் செய்யும் பிறருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைக் கூட அளிக்கப்படுவதில்லை. அவசரத் தேவைக்காக விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.இவர்களை விட தூய்மை பணியாளர்களின் நிலை மிகவும் மோசம். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், கோவிலை தொடர்ந்து, சுத்தம் செய்து, தூய்மையாக வைத்திருப்பவர்கள் இந்த தொழிலாளர்கள் தான். இவர்கள் பெரும்பாலும் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 4000 பேர் தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களது சம்பளம் வெறும் 6500 ரூபாய் மட்டுமே. இவர்களுக்கு இஎஸ்ஐ, பி.எஃப் போன்ற எந்த சலுகைகளும் கிடையாது. வார விடுமுறை கூட கிடையாது.சுலாப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கீழ் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்களது ஒப்பந்த அறிக்கையை பெற முடியவில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.எனினும் கோவில் நிர்வாகம் தான் இவர்களின் உழைப்பால் பயன்பெறுகிறது என்பதால், நியாயமாக அவர்கள் இதில் தலையிட வேண்டும். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்வது கிடையாது.நிரந்தர தொழிலாளர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்தச் சலுகையும் இல்லை.திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு தலைவர் மற்றும் 14 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி செயல் அலுவலராக நியமிக்கப்படுகிறார். இந்த நியமனங்கள் ஆந்திர அரசால் செய்யப்படுகிறது.காணிக்கை செய்யப்படும் முடியை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் 200 கோடி ரூபாய். மொத்த சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய். உண்டியல் வருமானம் மட்டும் ஆண்டுக்கு 4400 கோடி ரூபாய்.11 ஆயிரம் கிலோ தங்கத்தை டெபாசிட் செய்திருப்பதன் மூலம் வரும் வருமானம் மட்டும் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்.இத்தனை கோடி ரூபாய் வருமானம் இருந்தும், சாதாரண தொழிலாளர்கள் தெருக்கோடியில் நிறுத்தப்பட்டுள்ளது வேதனை.