இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம் – ”பக்தர்கள் அஞ்சத் தேவையில்லை”

திருப்பதி லட்டுவில், பன்றி, பசு, மீன் கொழுப்புகள் மற்றும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பக்தர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. குற்றச்சாட்டிற்கு காரணமான நெய்யை வழங்கிய நிறுவனம் தமிழ்நாட்டின் திண்டுக்கலை சேர்ந்த நிறுவனம் என தெரியவந்துள்ளது. அதே போல் பரிசோதனை அறிக்கையை முழுவதுமாக நம்பத் தேவையில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் என்பது முழுக்க முழுக்க தொழில்முறை ரீதியிலான வலுவான கட்டமைப்பு கொண்டது. அதன் செயல் அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷியாமளா ராவ் என்பவர் சந்திரபாபு நாயுடு அரசால், கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் திருப்பதி லட்டுவின் சுவை மாறியுள்ளதாக கடந்த ஜுன் மாதம் பக்தர்கள் சிலர்.

புகார்.எழுப்பியுள்ளனர்.இதனையடுத்து, இதுபற்றி விசாரிப்பதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்கள். இந்தக் குழுவில் தேசிய பால்வள நிறுவனத்தின் அறிவியலாளர் சுரேந்திரநாத், மற்றொரு பால்வள அறிவியலாளர் பாஸ்கர ரெட்டி, பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் மகாதேவன், தெலங்கானா கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஸ்வர்ணலதா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.இவர்கள் தான் அந்த லட்டு சேம்பிள்களை குஜராத்தில் உள்ள National Dairy Development Board என்று சொல்லப்படக்கூடிய தேசிய பால்வள வாரியத்தின் பரிசோதனைக் கூடத்திற்கு ஜுலை 23தேதி அனுப்பி வைத்துள்ளனர்.

 

பரிசோதனையின் முடிவில், லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் foreign fats இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. foreign fats என்பது, பசு, பன்றி, மீன் ஆகியவற்றின் மாமிசம் மற்றும் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். நெய்யிற்கு பதிலாக இந்த பொருட்களை சுவைக்காக வெளிநாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
இதனையடுத்து நெய் சப்ளை செய்து வந்த தமிழ்நாட்டின் திண்டுக்கலை சேர்ந்த ஏ.ஆர். புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு திருப்பதி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இந்த தகவல்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பொது வெளியில் என்டிஏ கூட்டத்தில் புதன் கிழமை வெளியிட்டார். இது திருப்பதி பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறைகேடுகள் தொடங்கியதாக அவர் குற்றம்சாட்டி, அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனைப்பயன்படுத்திக் கொண்ட பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் இப்படிச் செய்து விட்டார் என குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.எனினும் இந்த பரிசோதனைக் கூடத்தின் ஆய்வறிக்கைகள் 100 சதவீத நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வுகளில் 100க்கு 100 சதவீதம் உண்மையான முடிவுகள் தான் வெளிவரும் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.பல நேரங்களில் இந்த உணவு பரிசோதனைகள் தவறான முடிவுகளை கொடுத்தற்கான சான்றுகள் உள்ளதாக கூறியுள்ளனர். வெஜிடபிள் ஆயில் நிறைந்த உணவுகளை பசுக்கள் உண்ணும் போது, அதன் பால் மற்றும் நெய்யில், விலங்குகளின் கொழுப்புகள் இருப்பது போன்ற முடிவுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதே போல சரியான தீவனங்கள் அழிக்கப்படாத பசுக்கள், மேலும் பாலில் இருந்த கொழுப்புக்களை நீக்கிய பிறகு, அதில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஆகியவற்றில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பது போன்ற முடிவுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.அதே போல் இந்த ஆய்வு முடிவு என்பது, வேண்டுமென்றே லட்டில் விலங்குகளின் கொழுப்புகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டதா, அல்லது, முடிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளதா போன்ற தெளிவான விபரங்கள் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதனிடையே, இது முழுக்க முழுக்க சந்திரபாபு நாயுடுவின் கீழ்த்தரமான அரசியல் என எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரும், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான வி.வி. சுப்பா ரெட்டி, இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பசுக்களின் பால் மூலம் தரமான நெய் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாக கூறியுள்ளார்.திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் மற்றொரு முன்னாள் தலைவரான புமனா கருணாகர ரெட்டியும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அரசு அதிகாரிகள் தான் நெய் கொள்முதலில் ஈடுபடுவதாகவும், இவர்கள் இரண்டு அரசுகளிலும் பணியாற்றுபவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திண்டுக்கலின் ஏ.ஆர். புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒரு கிலோ நெய், 320 ரூபாய்க்கு வாங்கி வந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்திடம் ஒரு கிலோ நெய்யை 475 ரூபாய்க்கு திருப்பதி தேவஸ்தானம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.திருப்பதி கோவிலில் ஒரு நாளைக்கு எத்தனை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வளவு நெய் தேவைப்படுகிறது, யார் இதனை தயாரிக்கின்றனர் போன்ற விபரங்களை அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button