முதலில் வளையலை தொட்டார் விட்டுவிட்டேன்… பிறகு கழுத்தை தொட்டார்” இயக்குநர் ரஞ்சித் மீது புகார்

கேரள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒரு புகாரின் பகுதியாக, மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார்.இயக்குநர் ரஞ்சித், மலையாள சூப்பர் ஸ்டார்களான, மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.அவர் மீதான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.தனது புகாரில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா கூறியுள்ளதாவது, கடந்த 2009ஆம் ஆண்டு, ஒரு படத்தின் நடிகர்கள் தேர்வு கேரளாவில் நடந்தது. அதற்காக தன்னை அழைத்திருந்தார்கள்.
அப்போது, இயக்குநர் ரஞ்சித், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார். அப்போது படத்தின் கதையை கூறிக் கொண்டே, தனது கையில் போட்டிருந்த வளையல்களை தொட்டார். கவனக்குறைவாக அப்படி செய்தது போன்று நடித்தார். பிறகு, தான் ஆர்வமாக கதையை கேட்கத் தொடங்கியபோது, தனது கழுத்தில் கை வைத்து, தலைமுடியை கோதினார். இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால், அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டேன். இரவு நேரம் என்பதால் உடனடியாக தன்னால் அங்கிருந்து, ஊருக்கு புறப்பட முடியவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து, கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டேன். திடீரென 10 வந்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது என அஞ்சியவாறே அன்று இரவு கழிந்தது. காலையில், ஊர் திரும்புவதற்கு அவர்கள் டிக்கெட் கூட போட்டுத் தரவில்லை. இவ்வாறு நடிகை ஸ்ரீ லேகா மித்ரா தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்த இயக்குநர் ரஞ்சித், இது புனையப்பட்ட கதை எனத் தெரிவித்தார்.
எர்ணாகுளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு ஸ்ரீ லேகாவை அழைத்தது உண்மை தான் என்றும், அவரிடம் திரைக்கதை எழுத்தாளர் சங்கர் என்பவர் தான் கதை சொன்னார் என்றும், அப்போது, அந்த அறையில் 2 உதவியாளர்கள் இருந்தார்கள் என்றும் பிறகு, நடிகை ஊருக்கு புறப்பட்டு விட்டார் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அந்த படத்தில் ஸ்ரீ லேகாவிற்கு எந்த கதாபாத்திரம் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டதால், அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும், அந்த தகவலை திரைக்கதை ஆசிரியர் சங்கர் ஸ்ரீ லேகாவிடம் கூற, அவர் கடும் ஆத்திரம் அடைந்ததாகவும் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விசாரணையில் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது