சுரேஷ்கோபி – பாஜக தலைமை மீண்டும் மோதல்! பத்திரிக்கையாளர்களிடம் ஆவேசம்!

மலையாள நடிகர் முகேஸ் மீது நடிகை மினு முனீர் பாலியல் புகார் எழுப்பியுள்ளார். நடிகர் முகேஸ் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து, நடிகரும், பாஜக மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் ஊடகங்களை கடுமையாக சாடினார்.இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் ஊடகங்களே விசாரணை நடத்தி, யூகங்களை பரப்பக் கூடாது என்றார். மேலும் எம்எல்ஏ முகேஸ் தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ஊடகங்களுக்கு கிடைத்த நல்ல தீனி என்றும் தெரிவித்தார்.அதே நேரம் சுரேஷ்கோபியின் கருத்தை நிராகரிப்பதாக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் எம்எல்ஏவும், நடிகருமான முகேஸ் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.சுரேந்திரனின் இந்தக் கருத்து, குறித்து, கேட்பதற்காக நடிகர் சுரேஷ் கோபியை செய்தியாளர்கள் மீண்டும் அணுகியபோது, ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். என்னுடைய பாதையில் குறுக்கே நிற்க உங்களுக்கு உரிமையில்லை.
என் பாதையில் நடந்து செல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது எனக் கூறி, வேகமாக தனது காரில் ஏறிச் சென்றார்.
கேரளாவில் பாஜக தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில், முதன் முறையாக திருச்சூரில் போட்டியிட்ட சுரேஷ்கோபி, தனது திரைப் பிரபலத்தின் மூலம் வெற்றி பெற்று, பாஜகவிற்கு கணக்கை துவங்கிக் கொடுத்தார். பிறகு, தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், பாஜக விரும்பினால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார்.