உலகம்

இஸ்ரேலில் எமர்ஜென்சி அறிவிப்பு! பதுங்கு அறைக்கு சென்ற நெதன்யாகு!

ஹிஸ்புல்லாவின் தலைமை ராணுவ தளபதி ஃபவுத் சுக்கூர் படுகொலைக்கான மிகப் பெரும் பதிலடி நடவடிக்கை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை தடுப்பதற்கான நடவடிக்கை என்று கூறி, இஸ்ரேலின் 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஹிஸ்புல்லா நிலைகள் மீது குண்டு வீசின.இதனையடுத்து சில மணி நேரங்களில் ஹிஸ்புல்லா தனது நடவடிக்கையை தொடங்கியது. ராக்கெட்டுகள், ஆள் இல்லா விமானங்கள் என ஒரே நேரத்தில் 320 ஆயுதங்கள் இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளன.

11 முக்கிய ராணுவ இலக்குகளை நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐயன் டோம்கள் பெரிதும் குறிவைக்கப்பட்டுள்ளன.இதனால் வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகள் தீக்கிரையாகி, புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. பல பகுதிகளில் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்தது.இதில் முதல்கட்டமாக ராணுவத்தைச் சேர்ந்த ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுச் சேத விபரங்களை ஆக்கிரமிப்பு படைகள் மதிப்பீடு செய்து வருகின்றன. டெல் அவிவ் விமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் பதுங்கு பாதாள அறையில் நடைபெற்றது.

இதில் ஆக்கிரமிப்பு பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, 48 மணி நேரத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்தனர்.இதனிடையே ஒரு மணி நேரத்தில் 320 ராக்கெட்டுகளை வீசிய ஹிஸ்புல்லா, இது பவுத் சுக்கூர் படுகொலைக்கான பதிலடியின் ஒரு பகுதி என்றும், முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்தடுத்த கட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button