காசா குழந்தைகளுக்கு சம்பளத்தில் 30 சதவீதத்தை வழங்கிய பிரபல கால் பந்து வீரர்!

காசாவை ஆதரித்ததால், அணியில் இருந்து நீக்கம்…
நீதிமன்றத்தில் போராடி நியாயம் பெற்ற கால்பந்து வீரர்…
இழப்பீட்டுத் தொகையை காசா குழந்தைகளுக்கு வழங்கி நெகிழ்ச்சி…
ஜெர்மனியில் இருந்து செயல்படும் பிரபல கால்பந்து அணி Mainz 05. இந்த அணியின் நட்சத்திர வீரர் அன்வர் அல் காசி (Anwar El Ghazi). இவர் கடந்த அக்டோபர் மாதம் தனது சமூக வலைதளத்தில் காசா மக்களுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதாவது ஆறு முதல் கடல் வரை தேவை பாலஸ்தீன விடுதலை என பதிவிட்டிருந்தார். இது இஸ்ரேலுக்கு எதிரான கருத்து என்று கூறி, Mainz 05 நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
இந்த போட்டியில் அவர் கலந்து கொண்டு முழுவதுமாக விளையாடி இருந்தால், சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றிருக்க முடியும் என்றும், வேறு அணிக்காக விளையாடி இருந்தாலும் கூட, அந்த தொகையை அவர் பெற்றிருக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை எதிர்த்து ஜெர்மனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தன்னை நீக்கியது தவறு என்றும், வேறு அணியில் சேர முடியாத நிலையில், தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், சுமார் 18 கோடி ரூபாய் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என Mainz 05 அணிக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அந்த தொகையில் சுமார் 13 கோடி ரூபாயை அவர் அந்த அணியிடம் இருந்து பெற்றுள்ளதாகவும், இதில் 3 இல் ஒரு பகுதியை சுமார் 4 கோடியே 70 லட்சம் ரூபாயை காசா குழந்தைகளுக்காக நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
======