ஒரே நாளில் 115 ராக்கெட்டுகளை வீசிய ஹிஸ்புல்லா!

ஒரே நாளில் 115 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா…
வடக்கு பகுதியை நோக்கி நகரும் போர்…
இஸ்ரேலின் வடக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை குறிவைத்து, ஒரே நாளில் 115 ராக்கெட்டுகள், டிரோன்களை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக லெபனான் நகரங்கள் மீது ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன.அப்பர் கலீலி, மேற்கு கலீலி, ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் ஆகிய பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது.
சில ஆயுதங்களை இடைமறித்ததாகவும், சில ஏவுகணைகள், டிரோன்கள் திறந்த வெளிகளிலும், செட்டில்மென்ட்களிலும் விழுந்ததாக ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் செவ்வாய்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.மேலும் காட்டுத் தீ காரணமாக வடக்கு இஸ்ரேல் புகை சூழ காட்சி அளித்தது. தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.
குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால், மக்கள் பதுங்கு அறைகளில் தங்கினர். காசாவில் இருந்து தங்களது பார்வையை லெபனான் பக்கம் திருப்ப வேண்டிய நேரம் வந்துள்ளதாக இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை, ஹிஸ்புல்லா கமாண்டர் சுக்கூர் படுகொலை, தெஹ்ரானில் தாக்குதல் நடத்தியது, ஹவுத்திக்களின் எண்ணெய் கிணறுகளை தாக்கியது போன்ற செயல்களுக்காக, இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த மாபெரும் தாக்குதலை நடத்த, ஈரான் கூட்டணி படைகள் முடிவு செய்துள்ளன.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காசா அமைதி பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் பதிலடி எப்போது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. எனினும் காசா அமைதிப் பேச்சுக்கும், தங்களது பதிலடிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தங்களது பதிலடி உறுதியான ஒன்று என ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆக்கிரமிப்பு ஊடகங்களிடம் பேசியுள்ள இஸ்ரேலியர்கள், எந்த ஆயுதத்தால், எப்போது, எங்கு தாக்கப்படப் போகிறோம் என்பது தெரியாமல் குழம்பிய நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். இது மின்கம்பியை பிடித்து, மின்சாரம் தாக்குவதை விட கொடுமையான ஒரு நிலை என அவர்கள் வர்ணித்துள்ளனர்.
===============================