உலக அளவில் 22 லட்சம் வசூல் – குறைவான வசூலில் கவுண்டம்பாளையம் புதிய சாதனை!

கவுண்டம்பாளையம் திரைப்படம், படுதோல்வி அடைந்த படங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இதுகுறித்து சினிமா டிக்கெட் விற்பனை இணையதளமான சக்னிக் வெளியிட்டுள்ள செய்தியில் கவுண்டம் பாளையம் திரைப்படம் அகில உலக அளவில் இன்று வரை 22 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சாதி ஆணவ கொலைகளை நியாயப்படுத்தும் விதமாக இப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், சாதி உணர்வுகளை வைத்து வியாபாரம் செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. படம் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் பொருந்தாத கதை, மோசமான திரைக்கதை, நட்சத்திர நடிகர்கள் இல்லாதது, எளிமையான தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.வழக்கமாக இதுபோன்ற கதைக் களத்தில் திரைப்படங்களை தயாரித்து, இயக்குநர் மோகன் ஜி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். வசூலிலும் அவரது படங்கள் சாதனை புரிந்து வருகின்றன. இதற்கு காரணம், மோகன் ஜியின் இயக்கம். அதே நேரம் இதனை முன்மாதிரியாக வைத்து, பல சாதி படங்கள் தொடர்ந்து தயாரிக்ப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலாவை தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்திற்கு குறைந்தது 1 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. இதில் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருகின்றன. அந்த வகையில் குறைந்த பட்சம் 1 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் கூட, வெறும் 22 லட்சம் மட்டுமே வசூலித்து, கவுண்டம் பாளையம் 78 சதவீத மூலதனத்தை இழந்துள்ளது.