இஸ்ரேலிய படையினர் இதுவரை 10,000 பேர் பலி, காயம்! மாதத்திற்கு 1000 பேர் மருத்துவமனையில் அனுமதி!

வெற்றிக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளோம்…
இஸ்ரேல் ராணுவ தளபதிக்கு, 100 அதிகாரிகள் கூட்டுக் கடிதம்…
இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி ஹர்சே ஹலேவிக்கு, அந்நாட்டு ரிசர்வ் படை அதிகாரிகள் 100 பேர் எழுதியுள்ள கடிதம் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, இன்னும் எதிரிகள் நம் நாட்டிற்குள் புகுந்து தாக்கும் அளவிற்கு வலிமையாகவே உள்ளனர்.
அவர்களிடம் ஆள் இல்லா கண்காணிப்பு விமானங்கள், தாக்குதல் விமானங்கள் உள்ளன. மோர்ட்டார் தாக்குதல்களை நடத்துகின்றனர். மிகப்பெரிய சுரங்க கட்டமைப்பை இன்னும் பெற்றுள்ளனர். எதிர்த்து போரிடும் வலிமையுடன் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இது உண்மையில் நமக்கு வெற்றியல்ல. வெற்றியில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், காசா போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் இஸ்ரேலிய படையினர், கொல்லப்பட்டு, அல்லது காயம் அடைந்து படையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோலன் குன்றுகள் உள்ளிட்ட இடங்களில் பணி ஆண்டு முடிந்த பெண் ராணுவத்தினருக்கு ஓய்வு கொடுக்காமல் 4 மாத பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போர் குறித்த அச்சம் மற்றும் கவலை காரணமாக இஸ்ரேலில் 25 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி, நிஜ உலகில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
====