உலகம்

நடவடிக்கையை தாமதப்படுத்தும் ஈரான் – இது தான் காரணம்?

தாக்குதலை தாமதப்படுத்தும் ஈரான்…
என்ன காரணம்… வெளியான முக்கியத் தகவல்கள்…

ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த மாதம் 31ஆம் தேதி தெஹ்ரானில் கொல்லப்பட்டார். இதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்தது. இதனையடுத்து அச்சத்தில் மூழ்கிய இஸ்ரேல்.
அதே நேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் தொடங்கியது இஸ்ரேல். அமெரிக்காவின் 10க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், 3 விமானம் தாங்கிய கப்பல்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், மத்திய கிழக்கிற்கு, இஸ்ரேலை காக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

இஸ்ரேலை தாக்கினால் கடும் பின் விளைவுகள் ஏற்படும் என ஈரானுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்தது. பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்த்து, இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரானின் நட்பு நாடான ரஷ்யா வலியுறுத்தியது.
இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் ஆகியும், ஈரான் ஏன் தனது நடவடிக்கையை தாமதப்படுத்துகிறது என்ற கேள்வி உலக அளவில் எழுந்துள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு ஈரான் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடைபெற வில்லை. இஸ்ரேலில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மத பண்டிகை நடைபெறுகிறது. அப்போது, தாக்குதல் நடத்தப்படலாம் என சில யூகங்கள்எழுந்தன. அதுவும் நடைபெறுமா என்பது சந்தேகம் தான்.

இந்த நிலையில், ஐ.நாவுக்கான ஈரான் தூதர், ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது காசா அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்காத வகையில், ஈரானின் தாக்குதல் இருக்கும் என்றார். இதன் பொருள், ஈரான் தீவிரத் தாக்குதலை நடத்தாது என்பது தான்.

அதே நேரம் இஸ்ரேலை திசை திருப்ப இப்படி அவர் கூறி இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. ராணுவ பார்வையாளர்களை பொருத்தவரை, அவர்கள் கூறுவது என்னவென்றால், கடந்த முறை ஈரான் ஏவிய ஏவுகணைகள், பல மணி நேரம் பயணித்து, இஸ்ரேலை நெருங்கின. அதற்கு முன் அவற்றை அமெரிக்காவும், அரபு நட்பு நாடுகளும் தடுத்து விட்டன.

இந்த முறை ஈரானின் தாக்குதல் என்பது,முழுக்க முழுக்க பாலிஸ்டிக் மிசல்ஸ் தாக்குதலாக இருக்கும் என்பது தான். அதாவது, சுமார் 12 நிமிடங்களில் அந்த ஆயுதம் இஸ்ரேலை தாக்கி விடும். ஒரு வேளை அப்படி நடைபெற்றால் சேதம் கடுமையாக இருக்கும்.

இந்த தாக்குதலை ஈரான் நடத்தும் போது, ஹிஸ்புல்லா, ஏமன் ஹவுத்திப் படைகள், ஈராக் குழுக்களும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள். இது இஸ்ரேலை நிலை குலைய செய்யும்.அதே நேரம் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தும். ஈரானைப் பொருத்தவரை, பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், டிரோன்கள் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், வான் பாதுகாப்பில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை.

வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷ்யாவிடம் இருந்து பெறும் முயற்சியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே போல் ஈரானிடம் போர் விமானங்கள் போதிய அளவில் இல்லை. அவற்றையும் ரஷ்யாவிடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் முழு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ஈரான் காலம் தாழ்த்தி வருவதாக கருதுகின்றனர்.

அதேபோல், நேரடித் தாக்குதலாக இல்லாமல், இஸ்ரேல் பாணியில், உளவுத்துறை மூலம் ஊடுருவி, முக்கிய இஸ்ரேல் தலைவர்களை தீர்த்துக் கட்டலாமா என்ற ஆலோசனையிலும் ஈரான் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button