அமெரிக்க ராணுவம் மீது சிரியாவில் தாக்குதல் – ராணுவ தளம் சேதம், பலர் காயம்!

ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் அமெரிக்க ராணுவம் மீது ஆள் இல்லா விமானத் தாக்குதல்….
அமெரிக்க வீரர்கள் பலர் காயம்… ராணுவ தளம் கடும் சேதம்…
சிரியாவின் ரிமெலன் நகரில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத் தளம் மீது ஆள் இல்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் பலர் இலேசான காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், மூளைக் காயம், புகையை உட்கொள்ளுதல், மனநல பாதிப்பு போன்ற பிரச்னைகளால் அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை என அமெரிக்கா கூறி இருந்தது.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் Kharab al-Jir வான்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல இடங்கள் தீப்பற்றி எரிந்தன.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், எண்ணெய் வளம் மிக்க சில பகுதிகளை அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் கூட்டுப்படை, சிரியா அரசிடம் இருந்து பறித்துவைத்துக் கொண்டு, அவற்றை கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்த பகுதிகளை மீட்கும் முயற்சியை சிரியா ஆதரவு பழங்குடிக் குழுக்கள் தற்போது தொடங்கியுள்ளன.
சிரியா போரில் அதிபர் பசார் அல் ஆசாத்துக்கு எதிராக, அமெரிக்காவுடன் சவுதி அரேபியோ உள்ளிட்ட சன்னிப்பிரிவு முஸ்லீம் நாடுகளும், சன்னிப்பிரிவு ஆயுதக் குழுக்களும் கை கோர்த்தன. தற்போது, காசா பிரச்னையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழு வீச்சில் உதவி செய்து வருவதால், அமெரிக்காவுடன் கை கோர்த்த சன்னிப்பிரிவு ஆயுதக்குழுக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படுகிறது.
இது அமெரிக்காவுக்கு, ஈராக் மற்றும் சிரியாவில் பின்னடைவாக கருதப்படுகிறது.
=====