உடனடி விசாரணை தேவை – இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடந்த 10 மாதங்களில் காசா வாசிகள் 18 பேர் இஸ்ரேல் சிறைகளில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மரண தண்டனை, சித்ரவதை, பட்டினி, பலாத்காரம், தனிமைப்படுத்துதல், கடத்தல் போன்ற பல மனித உரிமை மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.தற்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9700 ஐ எட்டியுள்ளது. அவர்களில் 80 பெண்கள், 52 பேர் ஊடகவியலாளர்கள், 250க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
3,380 பேர் குற்றச்சாட்டுக்கள் இன்றி, விசாரணையின்றி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 600 பேர் பல ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இது குறித்து உலக நாடுகளும், சன்னிப் பிரிவு முஸ்லீம் நாடுகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன.இந்நிலையில், விடுதலையான சில கைதிகள், வெளியிட்ட தகவல்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களை உலுக்கியது. இதனையடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட இஸ்லாமிய ஓத்துழைப்பு அமைப்பு, இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் குற்றங்கள் குறித்து, உடனடி விசாரணை தேவை என அந்த அமைப்பு கூறியுள்ளது. சுமார் 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, காசா விவகாரத்தில், லட்டர் பேட் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உள்ள 48 நாடுகள், முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளாகும். இருப்பினும் காசா விவகாரத்தில் இந்த அமைப்பு எந்த வித ஆக்கப்பபூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தொடர்ந்து, மயான அமைதி காத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.