போர் கப்பல்கள், விமானங்களை அனுப்பியுள்ள அமெரிக்கா! இஸ்ரேலுக்கு கை கொடுக்குமா?

ஈரானுக்கு விருந்தினராக வந்த பாலஸ்தீன முன்னாள் பிரதமரும், ஹமாஸ் இயக்க அரசியல் குழுத் தலைவருமான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிகழ்வால், அந்நாடு ஆத்திரத்தின் உச்சியில் உள்ளது.ஈரானின் பதிலடியை எதிர்கொள்ள இஸ்ரேலும், அமெரிக்காவும் தீவிரமாக தயாராகி வருகின்றன. எந்தெந்த தரப்பினர் தாக்குவார்கள், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் என்னென்ன, அவற்றை தடுப்பது எப்படி, அவர்களை திருப்பித் தாக்குவது எப்படி, அதற்கு தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதா போன்ற பல ஆய்வுகளை இஸ்ரேல் செய்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இஸ்ரேலிடம் தற்போதுள்ள ஆயுதங்கள், மனித வளம் ஆகியற்றை வைத்து, இந்த தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதால், அமெரிக்காவையும் உதவிக்கு அழைத்துள்ளனர்.இதனையடுத்து, ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் என கூடுதல் ராணுவ தளவாடங்களை மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக பெண்டகன் கூறியுள்ளது.காசா போர் தொடங்கிய உடனேயே அமெரிக்கா கூடுதல் படைகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தற்போது, மேலும் கூடுதலாக புதிய போர்க்கப்பல்கள், விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த அச்சுறுத்தல்களை ஈரான் தலைமையிலான இஸ்லாமிய எதிர்ப்பு படைகள், நிராகரித்துள்ளன. இதுகுறித்து லெபனான் ஊடகமான அல் மயாதீன் வெளியிட்டுள்ள கட்டுரையில், அமெரிக்காவின் உதவி இஸ்ரேலை காப்பாற்றாது என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 மாத கால போரின் காரணமாக இஸ்ரேல் ராணுவம் சோர்ந்த நிலையில் உள்ளது, அதன் ஆயுதங்கள் பழுதடைந்துள்ளதோடு, பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு இந்த போரில் உடன்பாடு இல்லை. இருப்பினும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஈரான் கொடுக்கும் பதிலடியை தாங்கிக் கொண்டு, அமெரிக்காவும், இஸ்ரேலும் பொறுமை காப்பதை தவிர வேறு வழியில்லை. அவர்கள் மீண்டும் பதிலடி கொடுத்தால், ஈரான் தலைமையிலான படைகள், முழு அளவிலான போரில் இறங்கிவிடுவார்கள். இதனை அமெரிக்கா விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கில், கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, தற்போது, பலவீனம் அடைந்து இருப்பதாகவும், இந்த போரின் முடிவில், சமநிலை முற்றிலுமாக மாறி இருக்கும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்களது தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை, ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்பை சீர்குலைக்கவில்லை என்றும், அமைப்பின் கட்டமைப்பு தொடர்ந்து நேர்த்தியாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.