இஸ்மாயில் ஹனியே விவகாரம் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே சம்பவம் எதிரொலி…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்
ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் முஸ்லீம் உலகை உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது மீண்டும் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ பிரிவு தலைவர் ஃபவுத் சுக்குர் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதே போல், ஹிஸ்புல்லாவுக்கான ஈரான் ஆலோசகர் மிலாட் பிடி என்பவரும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்டுள்ளார். அண்மையில் ஏமனின் ஹோதைதா நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஹவுத்திப் படைகளும் திட்டமிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பாதுகாப்பு செயலக அவசர கூட்டத்திற்கு சீனா, ஈரான், அல்ஜீரியா நாடுகள் அழைப்பு விடுத்தன. இதனை ஏற்று ரஷ்யா தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இதில் இஸ்ரேலின் செயல்பாடுகளுக்கு கண்டனம் எழும் எனத் தெரிகிறது.
அதே நேரம் இதற்கு முன்பு நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், பொதுச் சபைக் கூட்டங்கள், காசா மக்கள் மீதான தாக்குதலை தடுக்கவில்லை. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தொடர்ந்து அதன் மீதான நம்பிக்கையை உலக அளவில் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
===