காசாவில் நீடித்த, நிலையான போர் நிறுத்தம் வேண்டும் – குவாட் நாடுகள் வலியுறுத்தல்!

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் அவசியம்…
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்…
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு வலியுறுத்தல்..
காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஜப்பானில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதன் மூலம் காசாவில் நீடித்த, நிலையான போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறோம்.
தொடர்ந்து, இரு நாடுகள் கொள்கை அடிப்படையில், இறையான்மை மிக்க, சாத்தியம்மிக்க பாலஸ்தீன அரசு அமைய வேண்டும். இரு நாடுகள் கொள்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை விரிவாக்கம் செய்யக் கூடாது. எந்த ஒரு தரப்பும் வன்முறை பக்கம் செல்லக் கூடாது.
மேலும் இந்த போர் பிராந்திய போராக விரிவடையக்கூடாது என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறோம் என அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் 297வது நாளாக தாக்குதல் நடத்தி, சுமார் 40 ஆயிரம் காசா மக்களை கொன்று குவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றம், ஐரோப்பிய யூனியன், அரபு லீக் என பல சர்வதேச கூட்டமைப்புகள் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
====