கோகைன் போதையுடன் சுற்றித் திரியும் சுறாக்கள் – மனிதனின் பண வெறி உச்சம்!

போதையுடன் சுற்றித் திரியும் சுறாக்கள்…
மனிதன் ஏற்படுத்தும் செயற்கை பேரழிவு…
பிரேசில் நாட்டில் ஒரு அதிர்ச்சிகர உண்மையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு கடலில் சுற்றித் திரியும் சுறா மீன்கள் கோகைன் எனப்படும் போதைக்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சட்டவிரோத மருந்து கம்பெனிகள், போதை மருந்து தயாரிப்பாளர்கள் மூலம் கடலில் கொட்டப்படும் கழிவுகளை சுறாக்கள் சாப்பிட்டிருக்கலாம் என யூகித்துள்ளனர்.
அதே போல் போதை மருந்து கடத்தல் கும்பல்கள் சில நேரம் போலீசிடம் இருந்து தப்ப, போதை மருந்து பண்டல்களை கடலில் வீசுவதும் வழக்கம். இப்படி வீசப்பட்ட கோகைன் போதை மருந்துகளை சுறாக்கள் சாப்பிடுகின்றதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
சில சுறா மீன்களை பிடித்து பரிசோதனை செய்த போது, அதன் தசைகள், கல்லீரல் ஆகியவற்றில் பெருமளவு கோகைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த போதை மருந்து காரணமாக, சுறாக்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டு, அதன் வேட்டையாடும் திறன் குறையும் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் போதிய உணவு இன்றி, அவற்றின் வாழ்நாள் குறையும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக், ரசாயண கழிவுகள் வரிசையில், தற்போது கோகைன் போதைப் பொருட்களையும் கடலில் கொட்டி, அதனை குப்பை கூடமாக மாற்றி வருகிறது மனிதனின் பண வெறி…
===