டாலருக்கு மாற்றமாக பிரிக்ஸ் நாணயம் – தீவிரம் காட்டும் ஈரான்!

டாலர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஈரான்…
பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகம் செய்யும் பணியில் தீவிரம்…
ஒரு நாடு பணத்தை அச்சடிக்கும் போது, அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. கட்டுக்கடங்காமல் பணத்தை அச்சடிக்க முடியாது. அதற்கான மதிப்பு, தங்கமாகவோ, வெள்ளியாகவோ இருக்கு வேண்டும். ஆனால் உலகில் எந்த வித வரைமுறையும் இல்லாமல் அமெரிக்காவின் பணமான, டாலர் அச்சடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுவதாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் டாலரை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்வது தான்.
இங்கிருந்து தான் அமெரிக்காவின் ஆதிக்கம் தக்க வைக்கப்படுகிறது. எனவே அமெரிக்காவின் ஆதிக்கத்தை உலக அரசியலில் இருந்து புறந்தள்ள வேண்டும் என்றால், முதலில் டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக உலக நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்யும் போது, டாலரை பொதுப் பணமாக வைக்காமல், தங்களது நாட்டின் சொந்த நாணயங்கள் மூலம் அந்த வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமற்றது.
எனவே பொது நாணயம் அவசியமாகிறது. அந்த பொது நாணயம் டாலராக இருப்பது பிரச்னை. எனவே வேறு ஒரு பொது நாணயம் அவசியமாகிறது. இதனையொட்டி, உலகின் பெரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், தங்களுக்குள் பொது நாணயத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
BRICS அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகள் தற்போது, இணைந்துள்ளன. இதில் ஈரானும்ஒன்று. இந்த நிலையில், பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் பணிகளை துரிதப்படுத்தி வரும் ஈரான், அதனையொட்டி, மற்றொரு முக்கிய வேலையையும் செய்து முடித்துள்ளது.
அதாவது மிர் கார்டுகள் என்ற ஸ்மார்ட் கார்டுகள் உருவாக்கப்பட்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் பரவலாக மிர் கார்டுகள் பயன்பாடு தொடங்கியுள்ளது. இதனால் ரஷ்யா, ஈரான் இடையேயான வர்த்தகத்தில் டாலர் ஒழிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பல்வேறு நட்பு நாடுகளில் மிர் என்ற ஸ்மார்ட் கார்டை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டுகளை வைத்து, அந்நாட்டில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
====