292வது நாள் – எழுத முடியாத துயரங்கள்! வேடிக்கை பார்க்கும் அரபு, உலக நாடுகள்!

காசா மீது 292வது நாளாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…
வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களை அனுபவிக்கும் பாலஸ்தீனியர்கள்…
காசாவின் வடக்கு, தெற்கு, மத்தி என 3 முக்கிய பகுதிகளிலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள், 292வது நாளாக கொடூரத் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த திங்கட் கிழமை முதல் கான் யூனிஸ் நகரின் கிழக்கு பகுதியை குறிவைத்து வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், ராக்கெட் தாக்குதல், ஆள் இல்லா விமானத் தாக்குதல் என அனைத்து வகை தாக்குதல்களையும் இஸ்ரேல் படை நடத்தி வருகிறது.
கான் யூனிசில் மட்டும் கடந்த 2 நாட்களில் 121 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை முன் எப்போதும் இல்லாத மாபெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் அங்கு அரங்கேற்றியது. ஒரே இடத்தில் சுமார் 90 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
புதன் கிழமை மாலை நிலவரப்படி கடைசி 24 மணி நேரத்தில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 84 பேர் கொல்லப்பட்டதோடு, 329 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க விடாமல், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஆம்புலன்ஸ்களை தடுத்து வைத்துள்ளனர்.
வடக்கு காசாவின் Jabalia al-Balad பகுதியில் 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை கான் யூனிஸ் பகுதியில் இருந்து திடீரென வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை வலுக் கட்டாயமாக வெளியேற்றியுள்ளது.
அவர்கள் தங்களது உடமைகளை எடுத்துச் செல்வதற்கான அவகாசம் அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் al-Mawasi zone பகுதியில் குடியேறிய நிலையில் அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிவறை, மருந்துகள், கூடாரம் போன்ற எந்த வசதியும் இல்லை.
இதுவரை மொத்தம் 39 ஆயிரத்து, 145 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்து 257 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கான்யூசில் உள்ள அடக்கத்தலத்தை புல்டோசர் மூலம் தோண்டி இஸ்ரேல் படைகள் அதை அழித்துள்ளன.
கான்யூனிசில் இருந்து மொத்தம் 4 லட்சம் பேர் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய காசாவின் அல்மாவாசி நோக்கி நகர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் புதிதாக அவர்கள் செல்லும் இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புரேய்ஜ் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
292வது நாளாக இந்த அநியாயங்களை உலக நாடுகளும், அண்டை அரபு முஸ்லீம் நாடுகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
====