அமைச்சர் வந்துட்டார்… இறங்கிடுங்கோ…. இது விமானமா? அல்லது டவுன் பஸ்ஸா?

பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை ஆக்கிரமித்த அமைச்சர்…
அடுத்த நாள் ஊருக்கு செல்லுமாறு கூறி இறக்கி விடப்பட்ட விமானப் பயணி…
இது விமானமா அல்லது மாநகர பேருந்தா என வலைதளவாசிகள் விமர்சனம்…
பயணி ஒருவரை, விமான பாதுகாவலர்கள் அதில் இருந்து வெளியேற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இளம் பெண் ஒருவர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சிஎன்என் ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர், தான் பயணம் செய்த விமானத்தில் பயணி ஒருவர், அமைச்சர் வருகையால் வெளியேற்றப்பட்டார் என பதிவிட்டார். இதனை பார்த்த, நெட்டிசன்கள் அந்த விமான நிலைய அதிகாரிகளை கடுமையாக கண்டித்தனர். இந்தச் சம்பவம் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள அந்த விமான நிறுவனம், இதுசம்பந்தமாக முழுமையாக விசாரிக்கப்பட்டதாக கூறியுள்ளது. அந்த குறிப்பிட்ட விமானத்தில், இருக்கையை விட, கூடுதலாக 3 புக்கிங்கள் செய்யப்பட்டதாகவும், இதனால் போர்டிங் பாஸ் உடன் 3 கூடுதல் பயணிகள் விமானத்தை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களிடம், பேசிய அதிகாரிகள், விமான இருக்கைகள் நிரம்பி விட்டதால், வேறு விமானத்தில் அடுத்த நாள் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளனர். இதனை ஒரு பயணி ஏற்றுக் கொண்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
ஆனால் 2 பயணிகள் அதை ஏற்க மறுத்து, விமானத்தில் ஏறியதால், அதிகாரிகள் அவர்களை வெளியேற்றியதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எக்கானமி வகுப்பு பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு, பிஸ்னஸ் வகுப்பில், முக்கிய பிரமுகர்கள் அமரும் பகுதிக்கு அவர்கள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
===