சீனா தலைமையில் ஒருங்கிணைந்த 14 பாலஸ்தீன அரசியல் கட்சிகள்! உடன்படிக்கையில் கையெழுத்து!

சீனாவில் கூடிய 14 பாலஸ்தீன கட்சிகள் !
போருக்கு பின் காசாவை ஒற்றுமையாக ஆட்சி செய்வது என தீர்மானம்…
தகர்ந்த இஸ்ரேலின் சதித் திட்டம்…
பாலஸ்தீனித்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான, பத்தா மற்றும் ஹமாஸ் இணைந்து செயல்படுவது என சீனாவில் நடைபெற்ற 3 நாள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் மேலும் 12 பாலஸ்தீன அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டனர்.
பத்தா இயக்கம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாகும். இது பெரும்பாலும் மேற்கு கரையில் மேல்மட்ட அரசியல் சக்தியாக உள்ளது. காசா பகுதியில் ஹமாசுக்கு செல்வாக்கு உள்ளது.
அதே நேரம் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் 10 மாத கொடூரத் தாக்குதல்கள் அங்கு அரசியல் சமன்பாடுகளை மாற்றியுள்ளன.
எனினும், பாலஸ்தீன குழுக்களை ஒருங்கிணைக்கும் விதமாக சீனாவில் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து, ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத், பத்தா உள்ளிட்ட 14 அமைப்புகள் சேர்ந்தவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
போருக்கு பிறகு, பாலஸ்தீனத்தை ஒருங்கிணைந்து ஆட்சி செய்வது என தீர்மானித்துள்ளனர். மேலும் கிழக்கு ஜெருசலத்தை தலைமையிடமாக கொண்டு, மேற்கு கரை, காசா பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடாக நிர்வாகம் செய்வது என தீர்மானித்துள்ளனர்.
ஆனால் இஸ்ரேலோ ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என அறிவித்துவிட்டு, தொடர்ந்து காசா மக்களை கொன்று குவித்து வருகிறது. ஆனால் சீனாவோ, ஹமாஸ் அடங்கிய அரசை அமைக்க மத்தியஸ்தம் செய்து வருகிறது.
போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே, அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்க்க முடியும்.