இஸ்ரேல் துறைமுகத்துக்கு சென்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல்! கப்பல் கடும் சேதம்!

இஸ்ரேல் துறைமுகத்துக்கு சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல்…
நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…
சிங்கப்பூர் நாட்டின் கொடியுடன் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுத்திப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதே நேரம் உயிரிழப்புகள் இல்லை என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. எனினும் கப்பல் சேதம் அடைந்த நிலையில், சோமாலியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் தங்கள் எச்சரிக்கையை மீறி, இஸ்ரேல் துறைமுகத்திற்கு சென்றதால் தாக்கியதாக ஹவுத்திப் படை அறிவித்துள்ளது.
தங்களது எச்சரிக்கையை மீறி இஸ்ரேலுக்குச் சென்ற 88 கப்பல்கள் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேல் தொழில் அதிபருக்கு சொந்தமான கேலக்ஸி லீடம் என்ற சரக்கு கப்பலை 20க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சேர்ந்து, ஏமன் படை பிடித்து வைத்துள்ளது. ஒரு கப்பல் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இஸ்ரேலின் ஈழட் துறைமுகம் கப்பல்கள் வருகையின்றி மூடப்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சுமார் 5000 கப்பல்கள் தங்கள் வருகையை நிறுத்தியுள்ளன. இதனால் எகிப்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, இஸ்ரேலுக்குச் செல்லும் எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என ஏமன் படைத் தெரிவித்துள்ளது.