உலகம்

“நெதன்யாகுவின் நடவடிக்கை தற்காப்பு அல்ல. இனப்படுகொலை” – பிரான்சு பிரதமர் வேட்பாளர்!

பிரான்சு பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜீன்-லூக் மெலன்சோன்…
பிரான்சின் பாரம்பரிய இஸ்ரேல் ஆதரவு போக்கு தொடராது என அறிவிப்பு…
காசா மக்களின் பக்கம் உறுதியாக நிற்பதாக சூளுரை…

பிரான்சு அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில், பிரதமர் வேட்பாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலன்சோன். இவர் அண்மையில் வெர்சோ என்ற ஊடகத்தில் வெளியான பேட்டி வைரலாகி வருகிறது. இந்தப் பேட்டியின் மூலம் அவர் காசா விவகாரத்தை எவ்வளவு தெளிவாக அணுகுகின்றார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரது பேட்டியை பார்க்கலாம்.

“காசாவில் மிக நீண்டகாலமாக நிலவும் கொடூரச் சூழல் என்னை மிகவும் பாதித்துள்ளது. இது நன்னெறிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம். 2 மில்லியன் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். யூதர்கள் உலகம் முழுவதும் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பது உண்மையானால், அவர்களை பாதுகாக்கத் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பது உண்மையானால், இஸ்ரேலியர்கள் செய்யும் இந்த அட்டூழியங்கள் மட்டும் எப்படி நியாயம் ஆகும். காசா என்பது மேற்குலகத்தால் விளைந்த மரண வேதனையின் அடையாளம்.

இந்த மிகப்பெரிய கொடூரங்களை தடுத்து நிறுத்த முடியாமல், ஒரு கட்டத்தில் இதுவெல்லாம் சாதாரணமானது, கடந்து செல்ல வேண்டியது என்ற உள்ளுணர்வு நமக்கு உருவாக்கப்படுகிறது. நமது மனிதநேயத்தை நிலைநிறுத்த, இந்த விவகாரத்தில் நாம் உறுதியாக நிற்கவேண்டிய தேவை உள்ளது.

உலகம் முழுவதும் இரட்டை நிலை நிலவுகிறது. அமெரிக்காவின் பக்கம் நிற்பவர்களின் நியாயம் தான் பேசப்படுகிறது. உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு மேற்கொண்டதை ஆக்கிரமிப்பு என வர்ணிக்கும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், காசா விவகாரத்தில் நெதன்யாகு நிகழ்த்தும் கொடூரங்களை அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இது இரட்டை நிலை இல்லையா?

இது முதல்முறையல்ல. கடந்த 2008 – 2009 காலக்கட்டத்தில் பாலஸ்தீனியர்கள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டனர். காசா மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் மட்டும் வைக்கப்படவில்லை. அவர்கள் மீது குண்டுகளும் வீசப்படுகின்றன. இதுப்பற்றி பிரான்ஸ் நாடாளுமன்ற வெளிவிவகாரத்துறை தலைவர் Jean-Louis Bourlanges, குறிப்பிட்ட கருத்தை நான் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

அவர் என்ன சொன்னார் என்றால், “ அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் அந்த குற்றத்தை அவர்கள் காரணம் இல்லாமல் செய்யவில்லை.” என்று சொன்னார். நெதன்யாகுவின் நடவடிக்கைகள் தற்காப்பு அல்ல, மாபெரும் இனப்படுகொலை. முழுக்க முழுக்க சட்டவிரோதமானவை.

காசா மக்களுக்கு ஆதராக உலகம் முழுவதும் மனிதநேயம் கொண்டவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆனால் பிரான்சு ஊடகங்கள் முழுக்க முழுக்க அரபு எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுகின்றனர். இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக பிரான்சு தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

நான் எந்த நாட்டிற்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குபவன் அல்ல. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கூறுவது, நெதன்யாகு செய்யும் அட்டூழியங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகும். அதன் அர்த்தம் அது தான். இவ்வாறு பிரான்சு இடதுசாரித் தலைவரும், பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உள்ளவருமான Jean-Luc Melenchon. அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button