நாய்களை ஏவித் தாக்குதல், புறா எச்சங்களுக்கு நடுவே படுக்கை, வாரத்திற்கு ஒரு நாள் குளிக்க அனுமதி! பாலஸ்தீன் கைதிகள் அனுபவித்த கொடுமைகள்!

புறா எச்சங்களுக்கு நடுவே படுக்கை…
வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே 1 நிமிடம் குளிக்க அனுமதி…
100 பேருக்கு ஒரு டாய்லெட் பேப்பர்…
இஸ்ரேல் சிறைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை அனுபவிக்கும் பாலஸ்தீனியர்கள்…
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு முக்கிய காரணம், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நீண்ட கால பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது தான்.
இஸ்ரேலில் இருந்து பலரை பிடித்து வந்த ஹமாஸ் அமைப்பினர், அவர்களை விடுவிக்க வேண்டுமானால், பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
தற்போது காசா மீதான தாக்குதல் 271வது நாளை எட்டிய நிலையில் சிறைக்கைதிகள் பற்றி யாரும் பெரிதாக சிந்திக்கவில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, காசா ஷிபா மருத்துவமனை டாக்டர் அபு சலாமியா உள்ளிட்ட 55 பேர், இட பற்றாக்குறை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அவர்கள் மீண்டும் ஒரு முறை உலக மக்களுக்கு நினைவு படுத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர் அல் சலாமியா கூறியுள்ளதாவது, கடந்த 7 மாதங்களாக இஸ்ரேல் சிறையில் ஒரு நாள் விடாமல், தொடர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு தாக்குதல்கள், அவமானங்கள் கொடுமைகளை அனுபவித்தேன்.
சிறைச்சாலைகளில் அவ்வப்போது, நடைபெறும் கொடூரத் தாக்குதல்களில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாத நிலையில், அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மருத்துவர் என்று கூட பார்க்காமல் தனது விரலை உடைத்ததுடன், நாய்கள் மீது ஏவிவிட்டு, ஆணுறுப்பைக் கடிக்கச் செய்தனர். குண்டாந்தடி மூலம் தாக்கினர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் கூட கைதிகளை மனிதர்களாக நடத்தவில்லை, ஒரு பொருளைப் போல நடத்தினர். கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளாகும் கைதிகளுக்கு முறையாக மருத்துவம் அளிக்காததால், உடல் பாகங்கள் அழுகி, பலரின், கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு பிரட் அல்லது சில நேரங்களில் ஒரு டம்ளர் சோறு, ஒரு தக்காளி அல்லது வெள்ளரிக்காய் ஆகியவற்றை உணவாக கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு கைதியும் 25 கிலோ முதல் 30 கிலோ வரை எடை குறைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்த கட்டுரை ஒன்றை ஒயர் இணையதளமும் வெளியிட்டுள்ளது. இதில் பாலஸ்தீன் வழக்கறிஞர் Khaled Mahajneh என்பவர், இஸ்ரேல் சிறையில் தனது நண்பரும் பத்திரிக்கையாளருமான முகமது அரபி என்பவருக்கு நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார்.
இஸ்ரேலின் நெகவ் பாலைவனத்தில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்கு தான் கண்டதையும், பத்திரிக்கையாளர் முகமது அரபி அனுபவித்த கொடுமைகள் பற்றியும் பேசியுள்ளார். முகமது அரபி கண்கள் கட்டியவாறு, தன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டதாகவும், கண்ணில் இருந்த கட்டை அவிழ்த்த போது, சில நிமிடம் அவர் கண் தெரியாமல் அவதிப்பட்டு, பிறகு, ஒரு வழியாக தன்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது பல மணி நேரம் அவரது கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டுள்ளது.
பல மாதங்கள் தான் எங்கு வைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் இருந்துள்ளார் முகமது அரபி. இதற்கும் அவர் ஒரு பத்திரிக்கையாளர், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். புறா எச்சங்களின் நாற்றங்களுக்கு நடுவே தரையில் தான் முகமது அரபி படுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அதுவும் 1 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிமிடத்திற்கு மேல் சென்றால், வெயில் மற்றும் மழையில் பல மணி நேரம் நிற்க வைக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது மட்டுமே உடைகளை மாற்ற முடியும். கைதிகள் யாரும், யாருடனும் பேசக் கூடாது. மீறினால் கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்படும். 100 பேருக்கு ஒரே ஒரு டாய்லெட் பேப்பர் ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் தினமும் டாய்லெட் சென்றால், சுத்தம் செய்ய டாய்லெட் பேப்பர் இல்லாத காரணத்தால், மலத்தை அடக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் மலச்சிக்கல் மற்றும் அதனை தொடர்ந்து தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அடைத்து வைக்கப்படும் நேரம் போக வெளியில் எங்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், கண்கள், கை, கால்கள் கட்டி அழைத்துச் செல்லப்படும் நிலை. இதே போல் இந்தச் சிறைச்சாலையிலும் நாய்கள் மூலம் கைதிகளின் ஆணுறுப்பை கடிக்க வைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கும் அந்த சிறையில் ஹமாஸ் உறுப்பினர்கள் யாரும் இல்லை. விசாரணைக் கைதிகள் மட்டுமே. ஹமாஸ் உறுப்பினர்கள் என்றால், அவர்கள் Shabas என்ற சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். இந்த சிறையில் முதியவர்கள், சிறுவர்கள், குழந்தைகளுக்கு கூட இந்த நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. என தி ஒயர் இணையதளம் கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த விபரங்கள் சர்வதேச நீதிமன்றங்கள் முதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வரை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
====