“உண்மையான இந்துக்கள் வெறுப்பை விதைக்க மாட்டார்கள்” மோடியை நேருக்கு நேர் வம்பிழுத்த ராகுல்!

கடந்த ஆட்சியில் நாம் அனைவரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளோம்…
இன்னும் பல தலைவர்கள் சிறைச்சாலையில் உள்ளனர்…
மோடியை நேருக்கு நேர் வைத்து சரமாரி விமர்சனங்களை முன்வைத்த ராகுல்காந்தி…
எதிர்கட்சித் தலைவரான தனது முதல் உரையை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசியதாவது, மோடி கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர். பரமாத்மா அதாவது கடவுள் மோடியின் ஆத்மாவுடன் நேரடியாக பேசுவார். ஆனால் நாம் எல்லாம் சாதாரணமாக பிறந்து, இறக்கக் கூடிய மனிதர்கள்.
சிவபெருமானின் உருவப்படத்தை பாருங்கள். இதன் மூலம் என்ன தெரிகிறது. இந்துக்கள் யாருக்கும் அச்சப்படக் கூடாது. வெறுப்பை பரப்பக் கூடாது. ஆனால் பாஜக இந்த இரண்டையும் தான் செய்கிறது. அவர்கள் எப்படி இந்துக்கள் ஆவார்கள்?
எல்லா மதமும் இந்த இரண்டு விசயங்களைத் தான் சொல்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், ஜைனம், சீக்கியம் என எல்லா மதங்களும், பயப்படக் கூடாது, வெறுப்பை விதைக்க கூடாது என்கின்றன.
இந்தியா என்ற சிந்தனை மீதும், அரசியலமைப்புச் சாசன சட்டத்தின் மீதும் திட்டமிட்ட, அமைப்புமுறையாக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நம்மில் பலர் தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகியுள்ளோம். சிலர் தலைவர்கள் இன்னும் சிறைச்சாலைகளில் வாடி வருகின்றனர். அதிகாரம் மற்றும் செல்வம் ஒரு தரப்பிடம் மட்டும் குவிக்கப்படுகிறது.
சிறுபான்மையினர், தலித்துகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதனை அவர்கள் எதிர்த்தால், அவர்கள் நசுக்கப்படுகின்றனர்.
மோடியின் உத்தரவின் பேரில் இந்திய அரசு என் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. என்னை 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் பற்றி மோடி கவலைப்படவில்லை. அக்னீவீர் என்ற திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல. மோடியின் திட்டம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அக்னீவீர் திட்டம் ரத்து செய்யப்படும்.
பாஜகவின் அரசியல் மற்றும் கொள்கை மணிப்பூரை எரித்து விட்டது. அங்கு உள்நாட்டு போரை மூளச் செய்தது. ஆனால் இன்னும் அங்கு மோடி செல்லவில்லை.
நீட் தேர்வு மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அது பணக்காரர்களுக்கான தேர்வு, நன்றாக படிப்பவர்களுக்கான தேர்வு அல்ல என்ற முடிவுக்கு மாணவர்கள் வந்து விட்டனர்.
=====