265வது நாளாக காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! முழு விபரங்கள்!

265வது நாளில் பாலஸ்தீனியர்கள் அனுபவித்த துயரங்கள்…
கடைசி 24 மணி நேரத்தில் நடைபெற்ற கொடுமைகள்…
வேடிக்கை பார்க்கும் ஒட்டுமொத்த உலகம்…
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் வியாழக்கிழமையுடன் 265வது நாளை அடைந்தது. கடைசி 24 மணி நேரத்தில் மட்டும் 3 இடங்களில் இஸ்ரேல் தனது இனப்படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது.
இதில் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதிகளில் இன்னும் பலர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்க அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், பலரும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் துடிதுடித்து இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனிடையே திடீரென காசா சிட்டியின் சுஜாயே பகுதியில் இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ளதோடு, அங்கிருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வான் வழியாக அந்த பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியது.
பள்ளிக்கூடங்கள், கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் குண்டுவீசியதாக காசா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதலோடு நிறுத்திக் கொள்ளாமல், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்க்கப்பல்கள் மூலமாகவும் அகதிகள் முகாம்கள் நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 9 மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேலின் இனப்படுகொலையில் இதுவரை, மொத்தம் 37,765 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 86,429 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
====