8 கிராம் தங்கம் முதல்… 1000 பேருக்கு அதிரடி பரிசு… வித்தியாசமான முறையில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி…

டாக்டர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புது ஆயக்குடியில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புது ஆயக்குடி ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் ஆயை காயிதேமில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் டாக்டர் அஜ்மத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக ஆசிரியர் சபரிமாலா கலந்து கொண்டார்.இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான 50 கேள்விகள் கொடுக்கப்பட்டு, அதற்கு சரியான பதில் தருபவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
50 கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர்களுக்கு மெக்கா, மதினா நகரங்களுக்கு புனித உம்ரா பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து இடம் வருபவர்களுக்கு முதல் பரிசாக, 8 கிராம் தங்கம், 2ஆம் பரிசு 4 கிராம் தங்கம், 3ஆம் பரிசு 2 கிராம் தங்கம், 4ஆம் பரிசாக ஒரு நபருக்கு பிரிட்ஜ், 5ஆம் பரிசாக ஒரு நபருக்கு வாஷிங் மெஷின், 6 ஆம் பரிசாக கேஸ் ஸ்டவ், 7 ஆம் பரிசாக ஸ்டீல் பீரோ, அடுத்ததாக குக்கர், ஸ்டீல் அண்டா, ஸ்டீல் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேர்வுகள் முடிந்த நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட, சமூக ஆசிரியை சபரி மாலா, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இஸ்லாமிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார் .இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக காலை நேரம் நடைபெற்ற, இஸ்லாமிய மார்க்க விளக்க கண்காட்சியில், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த, ஆளுமைகள் கலந்து கொண்டு, இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான தங்களது சந்தேகங்களை கேட்டு, பதில் பெற்றனர்.