அரசியலிலும் சாதித்த யூசுப் பதான்! ஏழைத் தந்தைக்கு வெற்றியை பரிசளித்து உற்சாகம்!

இந்திய கிரிக்கெட்டில், இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதிரடிக்கு பெயர் போன யூசுப் பதான் தற்போது, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது வெற்றியை தனது ஏழைத் தந்தைக்கு பரிசளித்து, உணர்ச்சி பொங்க கருத்துக்கக்களை பதிவிட்டுள்ளார்.யூசுப் பதானின் தந்தை பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பு விடுக்கும் மோதினார் என்ற பணியைச் செய்து, 3500 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கியவர்.

இதனால் குழந்தைப் பருவத்தில் பதான் சகோதரர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். 50 பைசா கிடைத்தால், சமோஸா வாங்கி மகிழ்ச்சியாக சாப்பிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.அதே நேரம் குழந்தைகளை மிகவும் அன்பாக அவரது தந்தை வளர்த்து வந்ததால், தற்போதும், தந்தை மீது பதான் சகோதரர்கள் அளவுகடந்த அன்பை காட்டி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் பதான் சகோதரர்களின் அறக்கட்டளை மூலம் அவரது தந்தை, முகக்கவசம், விட்டமின் மாத்திரைகள், உணவு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி, குஜராத்தின் பரோடா காவல்துறையின் பாராட்டுக்களை பெற்றார்.
இதனிடையே கிரிக்கெட்டை தொடர்ந்து, அரசியலிலும் அதிரடி வெற்றியை குவித்துள்ளார் யூசுப் பதான். மேற்கு வங்க மாநிலத்தின் பஹரம்பூர் என்ற தொகுதியில் போட்டியிட்டு, சுமார் 5 லட்சத்து, 24 ஆயிரத்து, 500 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவர் வீழ்த்தியது சாதாரண ஒரு வேட்பாளரை அல்ல.35 ஆண்டுகளாக அரசியலில் கோலேச்சிய, கடந்த 5 முறை தொடர்ந்து எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியின், அதிர் ரஞ்சன் சவுத்ரி என்ற மிகப்பெரும் தலைவரை யூசுப் பதான் வீழ்த்தியுள்ளார். இதற்கு மிக முக்கிய காரணம் அவர் போட்டியிட்டது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த சூழ்நிலையில், டுவிட்டரில் தனது வெற்றியை குறிப்பிட்டு, கருத்து தெரிவித்துள்ள யூசுப் பதான்,
வெற்றிச் சான்றிதழ் உடன் எனது தந்தையுடன் நிற்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்ற போது, எப்படி பெருமையாக உணர்ந்தேனோ, எப்படி மகிழ்ந்தேனோ, அப்படி ஒரு உணர்வை இப்போதும் பெருகிறேன்.விளையாட்டில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பதன் நோக்கம், இந்த உன்னதமான தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பது தான்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதன் மூலம் எனது தந்தையும்மகிழ்ச்சியடைந்துள்ளார். என யூசுப் பதான் பதிவிட்டுள்ளார்.