அபுதாபி இந்துக்கோவிலில் குவியும் கூட்டம் – கோவில் நிர்வாகம் எடுத்த புதிய முடிவு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 100 சதவீதம் பேரும் இஸ்லாமியர்கள் என்றாலும், அந்த நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
அதிலும் அதில் 42 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.
துபாய், அபுதாபி போன்ற நகரங்களுக்கு அதிகளவில் சுற்றுலா செல்பவர்களும் இந்த தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள்தான். இதனால் அவர்கள் வருகையை அதிகரிக்க துபாய், அபுதாபி நகரங்கள் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தெற்காசியாவில் அதிகளவில் உள்ள இந்துக்களை ஈர்க்கும் வகையில் அபுதாபியில் முதல் முறையாக மிகப்பெரும் இந்து கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் நஹ்யானே நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்த கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்களிலும் அங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக கோவிலுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், கோவிலை நிர்வகித்து வரும் BAPS அமைப்பு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி இனி முன்பதிவு செய்த பொதுமக்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும், இதற்காக இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு, விரும்பும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், திங்கட்கிழமைகளில் கோவில் மூடப்பட்டு இருக்கும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் பரப்பளவில் மிக சிறிய நாடாக இருந்தாலும், உலகப்பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. 7 தனி தனி அமீரகங்களை கொண்ட கூட்டாட்சி நாடாக செயல்பட்டு வரும் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய வருவாயாக கச்சா எண்ணையே திகழ்ந்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாக திகழும் அபுதாபியும், அமீரகத்தின் பெரிய நகரமான துபாயும் இதில் முன்னிலையில் உள்ளன. கடலுக்குள் நிலத்தை அமைத்து, செயற்கை தீவுகளை உருவாக்குவதில் தொடங்கி, வானுயர்ந்த கட்டடங்களை அமைப்பது வரை அபுதாபியும், துபாயும் சுற்றுலா வளர்ச்சியில் போட்டி போட்டு வருகின்றன.
=============