பிரபல இயக்குநரின் கோபத்தை தணிக்க நூதன வழி – படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வரப்படும் நாய்கள்!

சினிமா படப்பிடிப்பின் போது, பெரும் பாடு படுபவர்கள் இயக்குநர்கள். பிற கலைஞர்களுக்கு சில குறிப்பிட்ட வேலைகள் மட்டுமே கடமையாக இருக்கும். ஆனால் இயக்குநர்களுக்கு அப்படியல்ல. எல்லாவற்றையும் தங்கள் தலை மீது போட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இதனால் இயக்குநர்கள் பலரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, எரிந்து விழுவார்கள் என்பது தான். சில இயக்குநர்கள் கெட்ட வார்த்தையில் கூட சகஜமாக பேசுவார்கள். சில இயக்குநர்கள் நடிகர்களை அடித்த சம்பவமும் உண்டு.
இந்த நிலையில் தான் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி பற்றிய ரகசியம் ஒன்றை நடிகர் பர்தீன் கான் வெளிப்படுத்தியுள்ளார்.பத்மாவத் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் அண்மையில் இயக்கிய வெப் தொடர் ஹீராமண்டி தி டைமண்ட் பசார்.
இந்த தொடரின் படப்பிடிப்பின் போது, பல சந்தர்ப்பங்களில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கோபமடைந்துள்ளார்.
அப்போது, உடனடியாக அவர் படப்பிடிப்பை நிறுத்துவாராம். உடனே அவர் வளர்க்கும் 25 நாய்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வரப்படுமாம்.அந்த நாய்களுடன் கொஞ்சி விளையாடி நேரத்தை போக்குவாராம். சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்கு, அதாவது ஜாலி மூடிற்கு வந்து விடுவாராம். பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என அதில் நடித்த பர்தீன் கான் தெரிவித்துள்ளார்.