
இங்கு படித்து விட்டு வெளிநாடு சென்று சம்பாதிப்போர் மத்தியில், வெளிநாட்டில் படித்து விட்டு, இங்கு வந்து சேவை செய்பவர்!3 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குபவர்.அதிகம் அறியப்படாத தொழில் அதிபர்! யார் இந்த ரிஷாத் பிரேம்ஜி?
தற்போது, சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் அதானி. அம்பானி அடுத்த இடத்தில் இருப்பதாக ப்ளூம்பர்க் அண்மையில் கூறியுள்ளது.இவர்கள் எல்லோரையும் விட சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து, இந்திய பணக்காரராக இருந்தவர் விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி
இவரைப்பற்றியும் பலருக்கும் தெரியும். ஆனால் இவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி பற்றி அதிகம் பேருக்கு தெரியாது. அசிம் பிரேம்ஜி தனது 21 வயதில் விப்ரோ சாம்ராஜ்யத்தை தொடங்கி, 53 வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் .தற்போது, அவரது மகன் ரிஷத் விப்ரோவை வழிநடத்தி வருகிறார்.
விப்ரோ 6 கண்டங்களில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்படும் பிரமாண்ட நிறுவனமாகும்.இந்த நிறுவனம் தனது லாபத்தில் பெரும்பகுதியை ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கான பயன்படுத்துகிறது.அதாவது, 3 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வருகிறது.
தற்போது இதன் தலைவரான ரிஷாத் பிரேம்ஜி, Harvard Business School லில் எம்.பி.ஏபடித்தவர்.அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில், பி.ஏ. எக்னாமிக்ஸ் படித்தவர்.தற்போது பெங்களூருவில் தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விப்ரோ நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தால், அதனால் முதலில் பாதிக்கப்படும் நபராக தன்னை ஆக்கிக் கொள்பவர் ரிஷாத் பிரேம்ஜி.
இவர் தனது சம்பளத்தை அண்மையில் பாதியாக குறைத்தார். கொரோனா காலக்கட்டத்தில் 31 சதவீதம் குறைத்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அரசின் நிதியுடன் படித்துவிட்டு, பிறகு அதிக சம்பளத்துக்காக அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் செல்பவர்கள் மத்தியில், வெளிநாட்டில் தனது தந்தையின் சொந்த பணத்தில் படித்து விட்டு இந்தியாவில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்பவராக உள்ளார் ரிஷாத் பிரேம்ஜி.
மேலும் இங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கும் உதவி வருகிறார்.சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்தாலே, பிறகு இந்தியாவெல்லாம் ஒரு நாடா, இங்கு வாழ முடியுமா என கேட்கும் புதுப் பணக்காரர்களுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரனாக இருந்தாலும் கூட குடும்பத்துடன் அவர் இந்தியாவில் வசித்து, மக்களோடு மக்களாய் இருந்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு நேர்காணலில் பேசும் போது, விப்ரோ நிறுவனம் எந்த ஊழியரையும் திறமையின் அடிப்படையில் மட்டுமே பணி அமர்த்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை என்றும், பன்முகத் தன்மை தேவை என்றும் வலியுறுத்தினார்.