அயோத்தியில் ரூ.750 கோடியில் கோவில் அருங்காட்சியகம் – டாடா நிறுவனம் அமைக்கிறது!

அயோத்தியில் ரூ.750 கோடியில் கோவில் அருங்காட்சியகம்…
வெறும் 1 ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் டாடா நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் யோகி ஆதித்யாநாத்…
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 1800 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையும் முன்பே அதனை மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், அயோத்திக்கு மேலும் கவனத்தை ஈர்க்கும் வகையில், அங்கு பிரமாண்ட அருங்காட்சியகத்தை அமைக்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்காக முதல்கட்டமாக 650 கோடி ரூபாயை ஒதுக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை corporate social responsibility fund இல் இருந்து டாடா நிறுவனம் ஒதுக்குகிறது. இதுகுறித்த திட்டத்தை பிரதமர் மோடியிடம் டாடா நிறுவன அதிகாரிகள் தேர்தலுக்கு முன்பே கூறி, அவரது ஒப்புதலை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, பல ஏக்கர் நிலத்தை இந்த கட்டுமான பணிகளுக்காக வழங்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெறும் 1 ரூபாய்க்கு, 90 ஆண்டுகள் குத்தகைக்கு டாடா நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட உள்ளது.
நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், அயோத்தி கோவில் தொடர்பான நடவடிக்கைகள் மதரீதியில் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல தொழில் நிறுவனமான டாடாவும், மத அரசியலுக்குள் நுழைகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முகேஷ் அம்பானி, அதானி, ஆகியோருக்கு மட்டுமே மோடி தலைமையிலான அரசு அதிக சலுகைகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், அந்த சலுகை வட்டாரத்திற்குள் நுழைய டாடாவும் முனைப்பு காட்டுகின்றதா என்ற கேள்வியையும் சமூக வலைதள வாசிகள் எழுப்பியுள்ளனர்.
கல்வி, பொதுச் சுகாதாரம், வறுமை, காற்று மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் உத்தரப்பிரதேசம் இன்னும் எத்தனை நாட்களுக்கு மதத்தை வைத்து இயங்கும் என்ற கேள்விகளையும் சமூக வலைதள வாசிகள் எழுப்பி வருகின்றனர்.
====================