தயார் நிலையில் 4 லட்சம் வீரர்கள் – ஏமன் தலைவர் அறிவிப்பு

இஸ்ரேலின் அராஜகங்களை வேடிக்கை பார்க்கும் அரபுத் தலைவர்கள் இறந்து விடுவதே மேலானது…
ஏமன் ஹவுத்திப்படைகளின் தலைவர் சையது அப்துல் மாலிக் அல் ஹவுத்தி விமர்சனம்…
இஸ்ரேலுடன் தொடர்ந்து போரிட சுமார் 4 லட்சம் ஏமன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு….
இஸ்ரேலுக்கு எதிராக போரிட சுமார் 4 லட்சம் ஏமன் வீரர்கள் தயாராக இருப்பதாக அந்நாட்டின் தலைவர் சையத் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.
காசா மக்களின் துன்பங்கள் துயரங்களை வேடிக்கை பார்ப்பவர்கள், வாழ்ந்தும் எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாசுக்கு எதிராக, மக்களை திரட்டி, ஒரு புதிய அரசை உருவாக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும், அதனை காசா மக்கள் நிராகரித்து, ஹமாசுக்கு பின்னால் அணி திரண்டு விட்டதாக கூறியுள்ளார்.
2 பெரிய நாடுகள் மோதிக் கொள்ளும் போது, பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்களை, இந்தப் போரில் இஸ்ரேல் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும், இந்த ஆயுதங்கள் அமெரிக்காவால் அனுப்பி வைக்கப்படுபவை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏமன் படைகள், பாலஸ்தீனியர்களை ஆதரிக்க கூடாது என்பதற்காக தங்கள் மீது பல நெருக்கடிகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக சவுதி அரேபியா முழுக்க முழுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மொரோக்கோவிலும் இதே போன்ற துரோக ஆட்சி நிலவுவதாகவும், ஆனால் அந்நாட்டு மக்கள் காசா மக்களின் பின்னால் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல பஹ்ரைன் மக்களும் தங்களது இஸ்லாமிய விரோத துரோக ஆட்சியாளர்களை எதிர்த்து களத்திற்கு வந்துள்ள நிலையில், பிற முஸ்லீம் நாடுகளிலும் இந்த நிலை வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
தங்கள் நாட்டு விமானங்களை அனுமதிக்க மறுக்கும் சவுதி அரேபியா, ஏமன் நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள் மீது பல்வேறு தடைகளை விதித்து, அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் சாதகமாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் போரில் பாலஸ்தீன போராளிகள் மற்றும் பொதுமக்களின் உறுதி, எதிரிகளை நிலைகுலைய வைத்துள்ளதாகவும், எதிரிகள் தங்களது படைகளில் ஆட்களை சேர்க்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறியுள்ளார். அதே நேரம் பாலஸ்தீன் மக்களுக்காக போராட ஏமனில் மட்டும் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில், இருப்பதாகவும், செங்கடல் வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் செல்ல முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எலியிடம் யானை தோற்றதைப் போன்று, அமெரிக்கா தனது மிகப்பெரிய போர்க்கப்பலை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டு ஓடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
====