ஒரு மணி நேரத்தில் 30 நடவடிக்கை!

செவ்வாய்கிழமை பிற்பகலில் ஒரே நேரத்தில் 30 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலை பதம் பார்த்தன. எனினும் பெரிய பாதிப்புகளோ, உயிர்ச்சேதமோ இல்லை என ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது.
அப்பர் கலீலி, வெஸ்ட் கலீலீ பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக ஹிஸ்புல்லா வீசிய ராக்கெட் ஒன்று Route 6 highway யை தாக்கியது. அப்போது அங்கு சென்று கொண்டிருந்த பேருந்து, கடும் சேதம் அடைந்தது. அதன் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே மீண்டும் இஸ்ரேலின் மொசாத் தலைமையகம் மற்றும் ராணுவ உளவுத்துறை தலைமையகமான 8200 யூனிட் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.பேஜர் தாக்குதல், ஹசன் நஸ்ருல்லா படுகொலையை தொடர்ந்து, லெபானான் மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேல், இந்தப் போரில் திடீரென முன்னேறியது போன்று காட்டி வரும் நிலையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.