கேதர்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் திருட்டு! ஏன் விசாரணை இல்லை? சங்கராச்சாரியார் கேள்வி!

கேதர்நாத் கோவிலைப் போன்று டெல்லியில் புதிய கோவில் கட்டுவதால் புனிதம் கெட்டுவிடும்…
காணாமல் போன 228 கிலோ தங்கம் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என சங்கராச்சாரியார் சரமாரி கேள்வி…
கேதர்நாத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரா சுவாமிகள் அண்மைக்காலமாக அதிரடிக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள இந்துக்களின் முக்கிய புனித தலமான கேதர்நாத் கோவிலின் மாதிரியை, டெல்லியில் கட்டுவதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி குறிப்பிட்ட அவர், சிவ புராணத்தில் 12 ஜோதிர்லிங்க தளங்களின் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, டெல்லியில் எப்படி கேதர்நாத் கோவிலை கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிலுக்குள் அரசியல்வாதிகள் புகுந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அண்மையில் கேதர் நாத் கோவிலின் தங்க பூச்சு வேலைகளுக்கு 125 கோடி ரூபாய் மதிப்புள்ள 228 கிலோ தங்கத்தை பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், அந்த தங்கம் களவு போய் விட்டதாகவும், அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
தற்போது, டெல்லியிலும் கோவில் கட்டி கொள்ளையடிக்கப்போகின்றீர்களா என வினவியுள்ளார்.
அண்மையில் ராகுல்காந்தி, இந்து மக்களை இழிவுபடுத்தி விட்டதாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் அவதூறு சுமத்திய நிலையில், சங்கராச்சாரியார் அபிமுக்தேஸ்வரானந்த், அதனை திட்டவட்டமாக மறுத்தார்.
ராகுல்காந்தியின் பேச்சை தான் முழுமையாக கேட்டதாகவும், அவர் இந்து மக்களை இழிவுபடுத்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என தெளிவுபடுத்தினார். இந்த நிலையில், மும்பையில் சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்த அவர், துரோகிகளுக்கு இந்து மதத்தில் இடம் இல்லை, உங்களுக்கு துரோகம் செய்த ஏக் நாத் ஷிண்டே உண்மையான இந்துவாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
====