காசாவில் 1,86,000 மக்கள் உயிரிழப்பு – பின்னணியில் இஸ்ரேல்! பிரிட்டன் பத்திரிக்கை பரபரப்பு தகவல்!

காசா நிர்வாகம் கூறிய உயிரிழப்புகளை விட, பல மடங்கு உயிரிழப்புகள்…
பிரிட்டன் மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்கள்…
காசா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் 276வது நாளை அடைந்துள்ளது. கடைசி 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா சுகாதார அமைச்சகத்தின் அறிக்கைப்படி மொத்தம் இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,193 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 87,903 பேர் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனின் அறிவியல் பத்திரிக்கையான The Lancet, அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்து, காசாவில் சுமார் 1,86,000 பேர் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்தத் தகவல் உலகத்தையே உலுக்கியுள்ளது. காசா நிர்வாகம் முழு வீச்சில் செயல்படுவதில்லை. தங்களுக்கு கிடைக்கும் உடல்களின் எண்ணிக்கை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். மேலும் மருந்து கிடைக்காமல் உயிரிழக்கும் பிற நோயாளிகளையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் விதித்துள்ள பல்வேறு தடைகளால் உயிரிழந்தவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த பத்திரிக்கை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இஸ்ரேலின் ஆயுதங்களால் கொல்லப்பட்ட மக்களை விட, அதன் கொடூர முற்றுகையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என கூறியுள்ளது. காசாவில் தற்போது சண்டை முடிவுக்கு வந்தாலும், கடந்த 9 மாதங்களாக அங்கு நிலவிய சுகாதாரச் சீர்கேடு, மாசு காரணமாக ஏற்பட்ட பல நோய்கள் மூலம் மக்களின் உயிரிழப்பு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் துப்பாக்கி குண்டுக்கு ஒரு பாலஸ்தீனியர் பலியாகிறார் என்று எடுத்துக் கொண்டால், அது விதித்துள்ள கட்டுபாடுகளால் பாதிக்கப்பட்டு, 15 பாலஸ்தீனியர்கள் இயற்கை மரணத்தை தழுவுவதாக அந்த பத்திரிக்கை வேதனை தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் உடனடி தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த பத்திரிக்கை, போர் முடிவுக்கு வந்த உடனேயே, தூய குடிநீர், உணவு, மருந்துகள் போதிய அளவில் காசா மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.