150 ஆண்டுகால வெற்றிக்கதை – டாடா ராம்ராஜ்யத்தின் வரலாறு

வரலாறு படைக்க வேண்டும் என்றால், ஏற்கனவே வரலாறு படைத்தவர்களின் வரலாற்றை வாசிக்க வேண்டும். அந்த வகையில் டாடாவின் வரலாறு வெற்றியாளர்களுக்கு ஒரு பாடப் புத்தகம்.
இந்தியாவை சேர்ந்த ஒரு தொழில் குழுமத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்ற செய்தி ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த நிறுவனம் வேறு எதுவும் இல்லை. நமக்கு சிறு வயதில் இருந்தே நன்கு அறிமுகமான டாட்டா குழுமம்தான் அது.
இணையத்தில் வெளியான செய்தி எந்த அளவு உண்மையானது என்பது குறித்த விவரங்கள் முழுவதும் வெளிவரவில்லை என்றாலும் டாட்டா என்ற இந்திய வர்த்தக சாம்ராஜ்யத்தின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக அது அமைந்தது.
டாட்டா குழுமத்தை பற்றி பேசும்போது நிச்சயம் அதன் பெருமைகளையும் சொல்ல வேண்டும். இந்த உலகில் இருக்கும் பல நாடுகள் தோன்றும் முன்னரே தோன்றியது டாட்டா குழுமம். உலகின் சில கார்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே 100 ஆண்டுகள் பாரம்பரியத்தை கொண்டது. ஒரு காலத்தில் உச்சபட்ச இடத்தில் இருந்த தொழில் நிறுவனங்கள் தற்போது இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. ஆனால் 150 ஆண்டுகள் தாண்டியும் தற்போது வரை உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக டாட்டா குழுமம் கோலோச்சி வருகிறது. சரி அதன் வரலாறுதான் என்ன?
1869ம் ஆண்டு ஜாம்செட்ஜி டாட்டா என்பவரால் மும்பையில் டாட்டா குழுமத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அவர் போட்ட விதை தற்போது ஆறு கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டு பெரும் ஆலமரமாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் தொழில் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்த ஜாம்செட்ஜி டாட்டா, பின்னர் 1870-ம் ஆண்டு ரூபாய் 21 ஆயிரம் மூலதனத்துடன், ஒரு பருத்தி ஆலையை நிறுவினார். தொடர்ந்து நாக்பூரில் எம்ப்ரஸ் மில் என்ற மற்றொரு பருத்தி ஆலையை நிறுவினார். அப்போதில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய டாட்டா நிறுவனத்தின் இறக்கைகள் தற்போது வரை தரையிறங்கவில்லை.
ஜாம்செட்ஜி டாட்டாவுக்கு பின்னர் அவரின் மூத்த மகன் சர் தோரப் டாட்டா, டாட்டா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். தந்தைக்கு மகன் சற்றும் குறைந்தவர் இல்லை என்பது போல பல்வேறு துறைகளில் அவர் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். அதிலும் இவரது காலத்தில்தான் டாட்டா நிறுவனம் இரும்பு உற்பத்தியில் களமிறங்கியது. சர் தோரப் டாட்டாவின் இந்த முடிவு டாட்டா குழுமத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அவர் உருவாக்கிய டாட்டா ஸ்டீல் தொழிற்சாலை இந்தியாவின் முதல் இருப்பு தொழிற்சாலை என்ற பெருமையைப் பெற்றது. இந்த தொழிற்சாலைக்கு அருகே அமைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூர் நகரம் தற்போது இந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக திகழ்கிறது என்றால் அதற்கு அடிக்கல் அப்போதே நாட்டப்பட்டுள்ளது.
சர் தோரப் டாட்டாவுக்கு பின்னர் நவ்ரோஜி சக்லத்வாலா டாட்டா குழுமத்த்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவருக்கு பின்னர் பொறுப்பேற்ற ஜே.ஆர்.டி டாட்டாதான் அக்கால இந்தியாவில் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர். இந்தியாவின் முதல் விமான அஞ்சல் சேவையைத் தொடங்கிய இவர், பின்னர் தனது விமான நிறுவனத்துக்கு ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்று பெயரிட்டார். இந்த நிறுவனம்தான் பிறகு ஏர் இந்தியா என்று பெயரிடப்பட்டு அரசு நிறுவனமாக மாற்றப்பட்டு இந்தியாவின் அடையாளமாக பல ஆண்டுகள் திகழ்ந்தது.
டாட்டா நிறுவனம் ஏன் உலகத்தின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதற்கு அவர்களின் தொலைநோக்கு பார்வையை வைத்தே நாம் முடிவு செய்யமுடியும். எதிர்கால உலகம் கணினியை சுற்றித்தான் சுழல போகிறது என்பதை உணர்ந்த ஜே.ஆர்.டி டாட்டா, 1968-ம் ஆண்டிலேயே ‘டிசிஎஸ்’ என்று அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளை கொண்ட இந்த நிறுவனம்தான் டாட்டா குழுமத்தின் அதிக வருவாய் கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.
ஜே.ஆர்.டி டாட்டாவுக்கு பிறகு ரத்தன் டாட்டா , டாட்டா குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில்தான் டாட்டா குழுமம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டது. புகழ்பெற்ற ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை இவர் தலைமையிலான டாட்டா குழுமம் கையகப்படுத்தியது.
இவரது காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாட்டா நானோ கார் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கார் உலகின் மலிவான கார் என்று கொண்டாடப்பட்டது. டாட்டா நிறுவனம் 150 ஆண்டுகள் தாண்டியும் வீரநடை போடுவதற்கு அதன் உறுதியான தலைவர்களும், அவர்களின் எதிர்காலத்தை நோக்கிய திட்டமுமே காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் டாட்டா குழுமம் அனைவர்க்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
===========