ஒரு மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட 1.50 லட்சம் பேர்! உடமைகளை கூட எடுக்க அனுமதிக்காத கொடுமை!

கான் யூனிசில் 4 லட்சம் பேர் உடனடியாக வெளியேற உத்தரவு…
1 மணி நேரம் மட்டுமே அவகாசம்…
உடைமைகளைக் கூட எடுக்காமல் வெளியேறிய லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
காசாவை மக்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை கடந்த 293 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதற்காக மக்களை இடம்பெயரச் செய்து துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அனைவரையும் ரபா எல்லைக்கு விரட்டி, அங்கிருந்து, எகிப்து வழியாக அவர்களை வெளியேற்றிவிட்டு காசா நிலத்தை கைப்பற்ற நினைத்தது. அந்த முயற்சிக்கு கூட்டாளிகளான அமெரிக்கா, எகிப்து நாடுகள் ஒத்துழைக்காததால், தற்போது, காசா மக்களை அழித்தொழிக்கும் வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் கிழக்கு கான்யூனிஸ் பகுதியை குறிவைத்து மாபெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாக சுமார் 4 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என துண்டு பிரசுரங்களை வினியோகித்தது. அவர்களுக்கு 1 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது.
உயிர் பிழைக்க வேண்டும் என்பதால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். அல் மவாசி முகாமுக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எஞ்சியவர்கள், எங்கு செல்வது என்று தெரியாமல், இறந்தாலும் இங்கேயே இறப்போம் என்ற முடிவில் தங்கி விட்டனர்.
சிலர் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்ட செல்லலாம் என தாமதம் செய்து விட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக இஸ்ரேல் படையின் குண்டு வீச்சில் சிக்கிக் கொண்டுள்ளனர். மறுபுறம் ஹமாஸ் உள்ளிட்ட போராளிக்குழுக்கள் தரை வழியாக முன்னேறி வரும் இஸ்ரேல் படையை குறிவைத்து கடும் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால், சண்டையின் நடுவே மக்கள் சிக்கிக் கொண்டனர்.
ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதற்கு பதிலாக பொத்தாம் பொதுவாக குண்டு இஸ்ரேல் வீசிய குண்டுகளால், கடந்த 4 நாட்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாதவாறு, இஸ்ரேல் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்துள்ளது.
193 நாட்களாக இவ்வளவு துயரங்கள் நடைபெற்றும், அண்டை முஸ்லீம் அரபு நாடுகளோ, ஏனைய உலக நாடுகளோ, இதனை தடுக்க எந்த உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனை.
====